நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு 70 பைசா, டீசல் 50 பைசா உயர்வு…
சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப 14 நாள்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. முன்னதாக ஜூலை 15ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
ஜூன் மாதத்தில் இருந்து ஐந்தாவது முறையாக பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, இதனால் பெட்ரோலுக்கான இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
இதன்படி டெல்லியில் உள்ளூர் வரிகள் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 84 பைசா அதிகரித்து ரூ.71.28 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உள்ளூர் வரிகள் சேர்த்து 88 பைசா அதிகரித்து, ரூ.78.61ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, விலை உயர்வுக்குப் பின் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை. ரூ 74.49 ஆக விற்பனை செய்யப்படும்.
இதேபோல், டெல்லியில் உள்ளூர் வரிகள் சேர்த்து ஒரு லிட்டர் டீசல் விலை 56 பைசா அதிகரித்து ரூ.51.40ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலை உள்ளூர் வரிகள் சேர்த்து 62 பைசா அதிகரித்து, ரூ.58.23ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.54.76ஆக விற்பனை செய்யப்படும்.
கடந்த ஜனவரி முதல் மாதம்தோறும் டீசல் விலையைச் சிறிது சிறிதாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர் விலை உயர்வு
இதேபோல் மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டரின் விலையில் 44 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 827 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 14 புள்ளி 2 பூஜ்ஜியம் கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இனி 871 ரூபாய்க்கு விற்கப்படும்.
ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் வரை மானியம் வழங்கப்படுவதால், அதற்கு மேல் வாங்கப்படும் சிலிண்டர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும். இந்த விலை உயர்வின் மூலம், டீசல், சமயல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மண்ணெண்னை விற்பனையில் ஏற்பட்டுவரும் வருவாய் இழப்பு முடிவுக்கு வரும் என இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.