தமிழர் பகுதிகளில் குவிந்துள்ள ஒன்றரை லட்சம் வீரர்களை விரட்டுங்கள்... கருணாநிதி
சென்னை: வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள காவல்துறை மற்றும் ராணுவத்தினர் அனைவருமே சிங்களவர்களாவர். மொத்தம் 15 படைப் பிரிவு வீரர்கள் அங்கே முகாமிட்டிருக்கிறார்கள். அதாவது இரண்டு லட்சம் வீரர்களைக்கொண்ட இலங்கை ராணுவத்தில், வடக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மிக அதிக அளவிலான இந்த ராணுவக் குவிப்பு மக்களிடம் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல்
இலங்கையில் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கை தலைமைத்தேர்தல் ஆணையர் மந்த தேஷபிரியா, தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் 12-7-2013 அன்று ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
ராணுவத்தை நீக்க கோரிக்கை
அந்த கூட்டத்திற்குப்பிறகு, தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடக்கு மாகாணத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அங்கு ராணுவத்தை படிப்படியாக குறைத்துக்கொள்ள வேண்டுமென்று கோரி வருகிறோம். வரும் செப்டம்பரில் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் எங்களது கோரிக்கையை ஆணையம் நிராகரித்துள்ளது.
போலீஸாரை ஈடுபடுத்தலாம்
எனினும், நிர்வாக நடவடிக்கைகளில் ராணுவம் தலையிடுவதைக் குறைத்துக் கொண்டு, அத்தகைய பணிகளில் போலீசாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய ஆசிய பார்வையாளர்கள்
தேர்தலை நியாயமாக நடத்துவதை உறுதிப்படுத்தும் வகையில், காமன்வெல்த் மற்றும் ஆசிய நாடுகளின் பார்வையாளர்களை வரவழைக்க தேர்தல் ஆணையர் ஒப்புக்கொண்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரோஹன் ஹெட்டியார்ச்சி தெரிவித்திருக்கிறார்.
சாக்கு போக்கு சொல்லும் இலங்கை
வடக்கு மாகாணத்தில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதை, குறைக்க வேண்டுமென்று சர்வதேச நாடுகள் கூறி வருகின்றன. ஆனாலும், பாதுகாப்புக்காக என்று சாக்குச்சொல்லி, அந்த ராணுவத்தை விலக்கிக்கொள்ள இலங்கை அரசு மறுத்து வருகிறது. இந்த சூழலில் சுதந்திரமாக அங்கே தேர்தல் நடைபெற வேண்டுமென்றால், அங்கே குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை அந்தப் பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஒன்றரை லட்சம் வீரர்கள் குவிப்பு
வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள காவல்துறை மற்றும் ராணுவத்தினர் அனைவருமே சிங்களவர்களாவர். மொத்தம் 15 படைப் பிரிவு வீரர்கள் அங்கே முகாமிட்டிருக்கிறார்கள். அதாவது இரண்டு லட்சம் வீரர்களைக்கொண்ட இலங்கை ராணுவத்தில், வடக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மிக அதிக அளவிலான இந்த ராணுவக் குவிப்பு மக்களிடம் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவநீதம் பிள்ளை ஆய்வு
இலங்கை பயணத்தின்போது தமிழர் பகுதிகளில் நடக்கும் சீரமைப்பு நடவடிக்கைகளை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் நவநீதம் பிள்ளை ஆய்வு செய்யவிருக்கிறார்.
எதிர்பார்ப்பில் தமிழர்கள்
நவநீதம் பிள்ளை இலங்கைக்கு செல்லும்போது வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்துவதற்கு முன்பே திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முறைகேடுகள் பற்றியும், தமிழர்களுக்கு சென்றடைய வேண்டிய நிவாரண உதவிகள் முறையாக சென்றடையவில்லை என்ற குறை சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருவதைப் பற்றியும் நேரடியாக கண்டறிந்து அதை சரி செய்வதற்கான முயற்சிகளை ஐ.நா.அளவில் மேற்கொள்வார் என்று உலகத்தமிழர்கள் எல்லாம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
சிங்கள மயமாகும் தமிழ்ப் பெயர்கள்
தமிழர் பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மாற்றுவதைப்பற்றி நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியான இணைப்பை துண்டித்திடும் வகையிலும், சிங்களப்பகுதியான அனுராதபுரா மாவட்டத்தோடு இணைந்திருக்கும் வகையிலும், வெளிஓயா என்ற சிங்கள பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை ராஜபக்சே அரசு உருவாக்கி அங்கே சிங்களவர்களை மட்டுமே குடியேற்றி வருகின்ற நிகழ்வுகளும் தற்போது நடைபெற்று வருவதை டெசோஅமைப்பின் சார்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீறுகிறது சிங்கள அரசு
மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி, பொதுத்தேர்தல் நடைபெறும் காலத்தில் இது போன்ற மாவட்டங்களை புதிதாக உருவாக்குவதோ, எல்லைகளை மாற்றுவதோ, புதிய குடியேற்றத்தை ஊக்குவிப்பதோ கூடாது என்று திட்டவட்டமாக கூறப்பட்டிருந்த போதிலும், அதை மீறுகின்ற வகையில் சிங்கள அரசு செயல்பட்டு வருவதையும் டெசோ அமைப்பின் சார்பில் ஏற்கனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
ஆக. 8ல் டெசோ ஆர்ப்பாட்டம்
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக இலங்கை அரசமைப்பு சட்டத்தின் 13-வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வற்புறுத்தியும், தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தை தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியும், டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை தமிழக மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச்சியை ஒன்று திரட்டவும்தான் வருகின்ற ஆகஸ்ட் 8-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் "தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்" நடைபெறவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.