ஜிம்பாப்வேயில் மீண்டும் அதிபர் முகாபே வெற்றி முகம்- எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு!
ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற புதிய அதிபர் மற்றும் பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் முகாபேயின் ஷானு பி.எப்.கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே தேர்தலில் தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே , ஜனநாயக மாற்றத்துக்காண இயக்கம் (எம்.டி.சி.) கட்சி சார்பில் பிரதமர் மோர்கன் டிஸ்வான்கிரை உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
210 தொகுதிகளுக்கான வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் அதிபர் முகாபேயின் ஷானு பி.எப். கட்சி 137 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த தகவலை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆனால் இம் முடிவை எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கத்தின் கட்சி வேட்பாளரும், பிரதமருமான மோர்கன் டிஸ்வான்கிரை ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை என்று அவர் புகார் கூறியுள்ளார்.
இதனால் ஜிம்பாப்வேயில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே, ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.