மலிவு விலை காய்கறிக் கடையில் சின்ன வெங்காயம், நவின் தக்காளி விலை குறைப்பு
சென்னை: தமிழக அரசின் மலிவுவிலை காய்கறிக் கடைகளில் வெங்காயம், தக்காளி போன்றவற்றின் விலையைக் குறைத்துள்ளதாக மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான ஆய்வுக் கூட்டத்தின்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர்.
தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த மலிவு விலைக் கடைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு விலை குறைவாக இருப்பதால் மக்கள் இங்கு வந்து காய்கறி வாங்குவதை விரும்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் சாம்பார் வெங்காயம், தக்காளி ஆகியவற்றின்விலையை மேலும் குறைத்துள்ளனர். இதுதொடர்பாக அமைச்சர் கூறியதாவது...
தங்கு தடையின்றி விற்க வேண்டும்
பொது விநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும்.
அரிசி நல்லாருக்கனும்
நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து தரமுள்ள அரிசியை மட்டுமே நியாய விலைக் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். தரமற்ற அரிசி அனுப்பப்பட்டாலோ அல்லது விநியோகிக்கப்பட்டாலோ, அதை கண்டறியப்பட்டால் அதற்கு பொறுப்பான அலுவலர் மற்றும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எடைக் குறைப்பு கூடவே கூடாது
எடைகுறைவு, பொருட்களை இருப்பு வைத்துக் கொண்டு குடும்ப அட்டை தாரர்களிடம் சரக்கு இருப்பு இல்லை எனக்கூறக் கூடாது.
தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை
உளுந்து, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை குடும்ப அட்டை தாரர்களுக்கு சரியாக விநியோகம் செய்யாமலிருப்பது ஆகிய செயல்களில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
நவின் தக்காளி விலை குறைப்பு
இதனைத் தொடர்ந்து பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் காய்கறி விற்பனை விலை மற்றும் வெளிமார்கெட்டில் காய்கறி விலையை கேட்டறிந்த பின்பு பண்ணைப் பசுமை நுகர்வோர் காய்கறிக் கடைகளில் விற்கப்படும் நவின் தக்காளி விற்பனை விலையை ரூ. 25-லிருந்து ரூ.20 ஆக உடனடியாக குறைக்க வேண்டும்.
சாம்பார் வெங்காயம் கிலோவுக்கு ரூ. 50
சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.60-லிருந்து ரூ.50 ஆக குறைக்க உத்தரவிடப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.