காமன்வெல்த் மாநாட்டை மன்மோகன்சிங் புறக்கணிக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் தொடங்கியுள்ளது. இலங்கை காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை சிறையில் அடைபட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் ஆகியவை மாணவர்களின் முதன்மை கோரிக்கைகளாகும்.
மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், காமன்வெல்த் மாநாடு கொழும்புவில் நடைபெற்றால் அதனை புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ள பட்டினிப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறது
இந்திய- இலங்கை கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்தார்கள் என்று கூறி நமது நாட்டின் மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்குவதும், அவர்களின் வலைகளை அறுத்தெறிவதும், அவர்கள் பிடித்து வைத்துள்ள மீன்களை கவர்ந்து செல்வதும், அவர்களை மிக கீழ்த்தரமாக நடத்தி அவமானப்படுத்துவதும், பிறகு அவர்களை இலங்கைக்கு கடத்திச் சென்று சிறையில் அடைப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? என்றுதான் நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம், ஆனால் பதில் இல்லை. இப்போதுதான் முதல் முறையாக இந்தியாவிற்கான இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டித்ததாக செய்திகள் கூறுகின்றன.
இலங்கை தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ள தாக பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். அது உண்மையானால், கொழும்புவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை வேறொரு நாட்டின் தலைநகருக்கு மாற்றினால்தான் இந்தியா பங்கேற்கும் என்று கூற வேண்டும்.
இதுதான் சட்டக் கல்லூரி மாணவர்கள் வைக்கும் நியாயமான கோரிக்கையாகும்.
எனவே சட்டக் கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இது எந்த ஒரு அரசியல் கட்சியின் தலையீடும் இன்றி சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறது.
மாணவ சமுதாயம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அவர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளே தலைமையாகும். அதையே உறுதியாக பற்றிக்கொண்டு போராட வேண்டும் என்றும், அரசியல் சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிடக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என்று கூறியுள்ளார்.