ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஏழரை மணி நேரம் விடிய விடிய பாக். துப்பாக்கிச் சூடு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சுமார் ஏழரை மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியிருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதலைத் தொடங்கியது. இன்று காலை வரை சுமார் ஏழரை மணி நேரம் பாகிஸ்தான் ராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு இந்திய நிலைகள் மீது சராமரி தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
சுமார் 7 ஆயிரம் ரவுண்டு வரை பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இந்திய வீரர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மேற்கொண்ட 4வது பெரிய தாக்குதல் இது.
அமெரிக்காவில் இந்திய- பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திக்க திட்டமிட்டிருக்கும் நிலையில் தற்போதைய தாக்குதல்கள் பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிகிறது.