எய்ட்ஸ் பாதித்த மகனை கழுத்தறுத்து கொன்ற தாய்... கைது செய்த போலீசார்
திருநெல்வேலி: நெல்லையில் எய்ட்ஸ் பாதித்த தனது மகனைக் கொன்று விட்டார் ஒரு தாய். அதற்கு உடந்தையாக சகோதரரும் இருந்துள்ளார். இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
வெளியில் தெரிந்தால் ஊராருக்கு முன் தலைக் குனிவு ஏற்படும் என்பதால் இந்த செயலில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.
எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட அந்த வாலிபரை கழுத்தை நெரித்து தாயும், மகனும் கொலை செய்துள்ள செயல் பலரது நெஞ்சங்களைப் பதை பதைக்க வைத்துள்ளது.
ஐசக் ராபின்
பனகுடி அருகே உள்ள கலந்தபானை என்ற ஊரைச் சேர்ந்தவர் 36 வயதான ஐசக் ராபின். இவருக்குத்தான் எய்ட்ஸ் வந்துள்ளது.
கட்டுமான சூப்பர்வைசர்
ராபின் கட்டுமானத் தொழிலில், சூப்பர்வைசராக இருந்து வந்தார். பல்வேறு ஊர்களுக்கு இதற்காக போய் வருவார்.
தாய் ஞானம் -தம்பி பிரபு
இவரது தாயார் பெயர் ஞானம். தம்பி பெயர் பிரபு. பிரபவுக்கு 30 வயதாகிறது. இருவரும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர். தந்தை ஜான் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
உடல் நலக்குறைவு
கடந்த ஆண்டு ராபினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவப் பரிசோதனைக்குப் போன இடத்தில் அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உறவினர்கள் விலகினர்
ராபினுக்கு எய்ட்ஸ் வந்துள்ள தகவல் உறவினர்கள் மத்தியில் பரவியதால் அவர்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டனர். ராபின் குடும்பத்துடன் பேசுவதையும் நிறுத்தி விட்டனர்.
மனம் உடைந்த தாய்
இதனால் ஐசக் ராபினின் தாயார் ஞானமும், தம்பி பிரபுவும் மனம் உடைந்தனர். உறவினர்கள் தங்களை நிராகரித்து விட்டதால் வருத்தத்தில் மூழ்கினர். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறுமாறு ராபினைக் கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
ஆகஸ்ட் 5ம் தேதி திடீர் மரணம்
இந்த நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதி பனகுடி காவல் நிலையத்திற்கு வந்த ஞானம், தனது மகன் திடீரென ரத்த வாந்தி எடுத்ததாகவும், சில நிமிடங்களில் மரணமடைந்து விட்டதாகவும் கூறினார்.
பிரேதப் பரிசோதனையில் உடைந்தது குட்டு
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று ராபின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், ராபின் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருப்பதாக தெரிய வந்தது.
கைது செய்ய எஸ்.பி. உத்தரவு
இதையடுத்து விரிவான விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார், ஞானம் உள்ளிட்டோரை விசாரிக்கச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
போலீஸில் சிக்கினர்
தீவிர வேட்டையில் ஞானம், பிரபு, பிரபுவின் நண்பர் விவேக் ஆகியோர் சிக்கினர்.
குடிபோதையில் சண்டை
போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சம்பவத்தன்று வீட்டில் மது அருந்தியுள்ளார் ராபின். அப்போது அவருக்கும், பிரபு, விவேக்குக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் ஞானம், பிரபு, விவேக் மூன்று பேரும் சேர்ந்து ராபின் கழுத்தை முறித்தும், தாக்கியும் கொலை செய்து விட்டனர் என்று தெரிய வந்தது.
இருப்பினும் இந்த சண்டைய விட, சமூகத்தில் தங்களுக்கு தலைக்குனிவு ஏற்பட்டதால்தான் ஞானமும், பிரபுவும் சேர்ந்து விவேக் உதவியுடன் ராபினைக் கொன்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications