இந்திய மீனவர்களை விடுவித்து திருப்பி அனுப்புங்கள்.. மன்மோகன் கண்டிப்பு
டெல்லி: கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்து திருப்பி அனுப்புமாறு இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
காமன்வெல்த் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க மன்மோகன்சிங்கை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் பிரதமர்,தமிழக மீனவர் பிரச்சினை குறித்து விவாதித்தார்.
கடந்த சில நாட்களாக இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், அவர்களை விடுவிக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை அமைச்சரிடம் வலியுறுத்தினார். மேலும் மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
வடக்கு மாகாணத் தேர்தல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர்,இந்த தேர்தல் ஒரு சமரச இணக்கத்தை ஏற்படுத்த உதவும் என்றும், தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்று தான் நம்புவதாகவும் பெரீஸிடம் தெரிவித்தார்.
இதேபோல, இலங்கை 13-வது சட்டதிருத்தத்தை நீர்த்துப்போக செய்யாமல், அதனை முன்னெடுத்துச்செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.