சீனாவுக்கு 'தில்' எச்சரிக்கை... எல்லை அருகே போர் விமானத்தை நிறுத்தியது இந்தியா!
டெல்லி: உலகிலேயே உயரமானதும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதுமான லடாக் பிராந்தியத்தில் உள்ள தெளலத் பேக் ஓல்டி ஓடுதளத்தில் தனது போர் விமானத்தை கொண்டு போய் நிறுத்தியுள்ளது இந்திய விமானப்படை.
இந்த ஓடுதளமானது, சீன எல்லைக்கு அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி லடாக் பகுதியில் ஊடுறுவலையும், ஆக்கிரமிப்பையும் மேற்கொண்டு வரும் சீனாவுக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
விமானப்படையின் சி 130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் அந்த ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில்தான், இங்குள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் இருதரப்பு படைகளுக்கும் இடையே பூசல் வெடித்தது நினைவிருக்கலாம்.
புதுத் தெம்பு
இந்த விமானத்தை நிறுத்தியதன் மூலம் இனிமேல் இப்பகுதியில் வீரர்கள், பொருட்கள், ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை விரைவாக கொண்டு வந்து சேர்க்க முடியும் என்பதால் வீரர்களுக்குப் புதுத் தெம்பு பிறந்துள்ளது.
உயர் அதிகாரிகளுடன் வந்த விமானம்
இதுகுறித்து விமானப்படை வெளியிட்ட தகவலில், சி130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் தெளலத் பேக் ஓல்டி ஓடுதளத்தில் இறங்கியுள்ளது. இதுதான் உலகிலேயே உயரமான ஓடுதள்மாகும். குரூப் கேப்டன் தேஜ்பிர் சிங் தலைமையிலான இரண்டு பேர் கொண்ட குழு இந்த விமானத்தில் பயணித்தது. அக்சய் சீன் பகுதியில் இந்த விமானம் தரையிறங்கியது என்று கூறப்பட்டிருந்தது.
2008ல் சீரமைக்கப்பட்டது
இந்த ஓடுதளமானது 2008ம் ஆண்டு சீரமைக்கப்பட்டு முதலில் ஆண்டனோவ் 32 என்ற விமானம் அங்கு தரையிறங்கியது. அதன் பிறகு இது பயன்படுத்தப்படவில்லை.
பாக். போரில் பயன்பட்ட ஓடுதளம்
1965ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரின்போது இந்த ஓடுதளம் பெருமளவில் நமக்கு உதவியது. போருக்குப் பின்னர் இது பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
சீனாவின் சில்மிஷத்தால் புத்துயிர்
தற்போது அடிக்கடி லடாக் பிராந்தியத்திற்குள் சீனப்படையினர் ஊடுறுவுவதால் மீண்டும் இந்த ரன்வேக்கு உயிர் தரப்பட்டுள்ளது.
ஊடுறுவி வந்த 50 சீன வீரர்கள்
கடந்த ஏப்ரல் மாதம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 50 சீன வீரர்கள் இப்பகுதியில் ஊடுறுவினர். தெளலத் போக் ஓல்டி பகுதியில் தற்காலிக முகாமையும் அமைத்தனர். இந்தப் பகுதியான சீன எல்லையிலிருந்து இந்தியப் பகுதிக்குள் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகும்.
21 நாள் அட்டகாசம்
அதன் பிறகு 21 நாட்கள் சீனப்படையினர் அங்கேயே முகாமிட்டிருந்தனர். இதனால் பதட்டம் அதிகரித்தது. பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பி்ன்னர் சீனப்படையினர் பின்வாங்கிச் சென்றனர்.