12 ஆந்திரா எம்.பி.க்களை லோக்சபாவில் இருந்து சஸ்பென்ட் செய்தார் சபாநாயகர்!
டெல்லி: லோக்சபா நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கியதால் 12 ஆந்திரா மாநில எம்.பி.க்களை சபாநாயகர் மீரா குமார் இன்று சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபாவில் கடந்த ஒருவார காலமாகவே கூச்சல் குழப்பம் ஒத்திவைப்புதான்! இதனால் நேற்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், 11 ஆந்திரா எம்.பி.க்களை சஸ்பென்ட் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார்.
ஆனால் இத்தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் ஆந்திரா எம்.பி.க்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் மீராகுமாரின் மைக்குகள் உடைக்கப்பட்டன. இதனால் அத்தீர்மானம் அப்படியே நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் இன்று காலையில் லோக்சபா கூடிய போதும் அமளி நீடித்தது. இதைத் தொடர்ந்து பகல் 12 மணியளவில் சபை மீண்டும் கூடிய போது நேற்று கொண்டுவரப்பட்ட சஸ்பென்ட் தீர்மானம் திரும்பப் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து சபாநாயகர் மீரா குமார் தமக்கான அதிகாரத்தின் கீழ் 12 ஆந்திரா எம்.பிக்களை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்வதாக அறிவித்தார்.
தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டோரில் 8 பேர் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள். எஞ்சிய 4 பேர் தெலுங்குதேசம் எம்.பிக்களாவார்.
கடந்த ஆண்டு இதேபோல் தெலுங்கானாவுக்காக குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டதாக 8 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.