ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தால் சீமாந்திரா போராட்டம் முடிவுக்கு வரும்: சிரஞ்சீவி
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25 நாட்களாக கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகியவற்றை உள்ளடக்கிய சீமாந்திராவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஒட்டுமொத்தமாக அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சரான நடிகர் சிரஞ்சீவி நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஏனெனில் சீமாந்திராவில் இருந்து ஹைதராபாத்தில் குடியேறி அங்கேயே பல்லாண்டுகாலமாக பல்லாயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர்.
ஹைதராபாத், தெலுங்கானாவுடன் சேர்ந்துவிட்டால் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் அவர்களிடத்தில் இருக்கிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால் சீமாந்திராவில் நடைபெற்று வரும் போராட்டம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்துவிடும்.
மத்திய அரசு தெலுங்கானா விவகாரத்தில் உறுதியாக இருந்தாலும் அதை உடனே செயல்படுத்தாது என நம்புகிறேன் என்றார்.