சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாபஸ்- சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. மனு!
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை நீக்கக் கோரி திமுக பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அம்மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனிடையே திடீரென அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை கர்நாடகா அரசு திரும்பப் பெற்றது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதாக பவானிசிங் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், அரசு வழக்கறிஞர் பவானிசிங் திரும்பப்பெற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை அவசரமாக உடனே விசாரிக்க ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் இம்மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.