பலாத்கார சாமியார் அசாராம் பாபுவை பாஜகவினர் யாரும் ஆதரிக்கக் கூடாது: மோடி 'கட்டளை'
டெல்லி: பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியிருக்கும் சாமியார் அசாராம் பாபுவை யாரும் ஆதரிக்கக் கூடாது என்று பாஜகவினருக்கு அக்கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் நரேந்திர மோடி கட்டளை பிறப்பித்துள்ளார்.
பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியிருக்கிறார் சர்ச்சைக்குரிய சாமியார் அசாரம் பாபு. அவரோ தாம் நிரபராதி.. தம் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் ரூ5 லட்சம் பரிசு தருகிறேன் என்றெல்லாம் ரீல் விட்டு வருகிறார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் பேசிய குஜராத் முதல்வரும் பாஜக பிரசார குழுத் தலைவருமான நரேந்திர மோடி, அசாராம் பாபு விவகாரத்தில் அவரை பாஜகவினர் ஆதரிக்கக் கூடாது. தம் மீதான குற்றச்சாட்டுகளை அசாராம்பாபுவே எதிர்கொள்ளட்டும் என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக பாஜக மூத்த தலைவர் உமாபாரதி, அசாராம் பாபுவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி, பிரபாத் ஜாவும் அசாராம் பாபுவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.