ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் மும்முரம் காட்டும் திமுக! தினகரன் வழக்கை தூசுதட்டும் அதிமுக!!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வர வர தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு அப்பால் நீதிமன்றங்களில் யுத்தம் நடத்துவதில் திமுக, அதிமுக மும்முரம் காட்டி வருகிறது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தே திமுக வெளியேறிவிட்ட நிலையில் ராஜ்யசபா தேர்தல் மூலம் ஒட்ட வைக்கும் முயற்சிகள் தொடங்கின. இந்த உறவு பலப்படும் வகையில் பெங்களூர் வழக்கில் திமுகவை தலையிட வைத்தது காங்கிரஸ்.
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக
பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் திமுக வாதாட அனுமதி பெற்றது. பின்னர் அரசு வழக்கறிஞரை கர்நாடகா காங்கிரஸ் அரசு வாபஸ் பெற்றது. இதனால் ஜெயலலிதாவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட இப்போது உச்சநீதிமன்றம் போயிருக்கிறார்.
திமுக தலையிட்டது ஏன்?
பொதுவாக சொத்துக் குவிப்பு வழக்கை எப்படியெல்லாம் இழுக்க முடியுமோ அப்படியெல்லாம் இழுத்தடிக்க நினைத்தது ஜெ. தரப்பு. ஆனால் திடீரென லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க வழக்கை விரைந்து முடிப்பதில் ஜெ. தரப்பு அக்கறை காட்டியது. இதனாலேயே சந்தேகப்பட்டுப் போன திமுகவும் காங்கிரஸும் கரம் கோர்த்து பெங்களூர் வழக்கில் குதித்துவிட்டது.
செக் வைக்க தா.கி. கொலை வழக்கு
காங்கிரஸ்- திமுகவின் இந்த தடாலடிக்கு பதிலடி கொடுக்க திமுகவின் தா. கிருட்டிணன் படுகொலை வழக்கில் மு.க. அழகிரி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருக்கிறது.
நில அபகரிப்பில் கருணாநிதியின் மகள் செல்வி
இந்த களேபரங்களுக்கு மத்தியில் சென்னையில் நில அபகரிப்பு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியை சிக்க வைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் மும்முரமடைந்திருக்கிறதாம்..
அடுத்த அதிரடியாக தினகரன் வழக்கு
இத்துடன் அதிமுகவும் தமிழக அரசும் விட்டுவிடுவதாக இல்லையாம். மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரித்து மூவர் கொல்லப்பட்ட வழக்கையும் கையிலெடுக்கப் போகிறதாம் தமிழக அரசு. இதில் சிபிஐதான் விசாரித்தது. இருப்பினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அல்லது தமிழக போலீசார் சார்பில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து திமுகவுக்கு சிக்கலை நெருக்கடியை ஏற்படுத்தவும் அதிமுக திட்டமிடுகிறதாம்.
எப்படியெல்லாம் நடக்குது அரசியல்?