பொருளாதாரச் சரிவு: ரொம்ப யோசிக்காதீங்க... அப்புறம் முட்டாளாயிடுவீங்களாம்
லண்டன்: நாடு முழுவதும் பொருளாதார சரிவு பெரும் கவலைகளை ஏற்படுத்தி வருகிறது. பிரதமரே அறிக்கை விட்டு கவலை தெரிவிக்கிறார். ஆனால் இப்படிப்பட்ட பொருளாதார, நிதிப் பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரமாக சிந்தித்துக் கொண்டிருந்தால் உங்களது புத்திசாலித்திறன் அதாவது ஐக்யூ மழுங்கிப் போய் விடும் என்று ஒரு எச்சரிக்கைச் செய்தி வந்துள்ளது.
எப்போது பார்த்தாலும் பணம், நிதிப் பிரச்சினை குறித்த கவலையில் இருந்தால் புத்திசாலித்திறன் மங்கி விடும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.
மேலும் புத்திசாலித்திறன் குறையும்போது அப்படிப்பட்டவர்கள் மிகவும் தவறான முடிவுகளையும், குழப்பமான முடிவுகளையுமே எடுப்பார்கள் என்றும் இது எச்சரிக்கிறது.
மூளை பாதிக்கும்
குறைந்த வருமானம் கொண்டோர், நிதிக் கவலையில் மூழ்கியிருப்போரின் மூளையானது, மற்றவர்களை மிகவும் குறைந்த செயல்திறனுடன் செயல்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்யூ கம்மியாகும்
மற்றவர்களுக்கு இருப்பதை விட இவர்களுக்கு ஐக்யூ குறைந்து விடுமாம். அதாவது 13 புள்ளிகள் அளவுக்கு குறைந்து விடுமாம்.
தப்புத் தப்பான முடிவுகள்
ஐக்யூ குறையும்போது இவர்கள் தவறான முடிவுகளையே எடுப்பார்களாம். குழப்பமான மன நிலையிலும் இருப்பார்களாம்.
கவலையை விட்டால் பழைய நிலை
அதேசமயம், குறைந்த வருமானம் கொண்டவர்களாகவே இருந்தாலும் கூட நிதிச் சுமை, கடன் சுமை, பணத் தேவை குறித்த கவலை இல்லாமல் இருந்தால் அவர்கள் பழைய இயல்பு நிலைக்குத் திரும்ப முடியுமாம். அவர்களின் ஐக்யூவும் கூடி விடுமாம்.
ஏழையாக இருந்தாலும் மூளையி்ல் பணக்காரராக இருக்கலாம்
ஏழையாகவே இருந்தாலும் நிதிக் கவலை இல்லாமல் இருந்தால் நல்ல ஐக்யூ திறனுடன் திகழ முடியும் என்றும் இதுதொடர்பான ஆய்வை நடத்திய ஹார்வர்ட் பல்கலைக்கழக குழுவினர் கூறுகின்றனர்.
கம்ப்யூட்டர் மாதிரிதான்
ஒரு கம்ப்யூட்டர் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்தால் எப்படி மந்தமாக இயங்குமோ, அதேபோலத்தான் மூளையும். ஒரே நேரத்தில் பல கவலைகளை மூளையில் திணித்தால் அது மழுங்கி விடும் அபாயம் உள்ளது என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க - இங்கிலாந்து கூட்டு ஆய்வு
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் முல்லைநாதன் என்ற தமிழரின் தலைமையில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
அமெரிக்க ஷாப்பிங் மாலில் ஆய்வு
அமெரிக்காவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலை இவர்கள் ஆய்வுக் களமாகவும் எடுத்துக் கொண்டனர். அங்கு பலரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் முடிவுகளைக் கூறியுள்ளனர்.
400 பேரிடம் ஆய்வு
வருமானம் குறைந்தோர், வருமாம் அதிகம் கொண்டோர் என மொத்தம் 400 பேரைத் தேர்வு செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம். அவர்களுக்கு ஐக்யூ டெஸ்ட்டுகளையும் வைத்துள்ளனர்.