நில பிரச்சனை: மேற்கு வங்கத்தில் அமைச்சருக்கு அடி, உதை கொடுத்து 8 மணிநேரம் சிறைபிடித்த மக்கள்
ராம்பூரத்: நிலத் தகராறில் மேற்கு வங்கத்தில் விலங்குகள் வள அமைச்சர் நூர் ஆலம் சவுத்ரியை மக்கள் அடித்து உதைத்து ஒரு கல்லூரியில் 8 மணிநேரம் சிறை வைத்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் விலங்குகள் வள அமைச்சராக இருப்பவர் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நூர் ஆலம் சவுத்ரி. சவுத்ரி தலைமையிலான அறக்கட்டளைக்கு சொந்தமாக தோகாபட்டி கிராமத்தில் உள்ள நிலத்தை மசூதி ஒன்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமித்தது குறித்து பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் பிர்பாம் மாவட்டத்தில் உள்ள ராம்பூரத்தில் இருக்கும் அஸ்லேஹா மகளிர் கல்லூரி விழாவில் கலந்துகொள்ள சவுத்ரி நேற்று அங்கு சென்றார். அப்போது அங்கு கூடிய மக்கள் நிலத் தகராறு காரணமாக சவுத்ரியை பிடித்து அடித்து உதைத்து கல்லூரிக்குள் வைத்து பூட்டிவிட்டனர். சவுத்ரியை விடுவிக்குமாறு போலீசார், மாவட்ட நிர்வாகம், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மசூதி ஆட்கள் பொதுமக்களுடன் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியாக காலை 11.30 மணிக்கு பூட்டி வைக்கப்பட்ட சவுத்ரி இரவு 8 மணிக்கு விடுவிக்கப்பட்டார். அந்த கல்லூரிக்கு அமைச்சரின் தாயார் அஸ்லேஹா பேகத்தின் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.