ஜோர்டான் ராணிக்கு தலைவணங்கி வணக்கம் வைத்த போப்பாண்டவர்
வாடிகன் சிட்டி: வழக்கத்திற்கு விரோதமாக, நடைமுறைக்குப் புறம்பாக ஜோர்டான் நாட்டு ராணிக்கு தலை குணிந்து வணக்கம் சொல்லி வரவேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.
வழக்கமாக போப்பாண்டவர் பதவியில் இருக்கும் யாருமே யாருக்கும் தலைவணங்கி வணக்கம் செலுத்த மாட்டார்கள். மாறாக அவர்களைப் பார்ப்பவர்கள்தான் தலை வணங்கி வணக்கம் செலுத்துவார்கள்.
ஆனால் பாரம்பரியமாக இருந்து வருவதை உடைத்து புதுப் புரட்சி படைத்து வரும் போப்பாண்டவர் பிரான்சிஸ், ஜோர்டான் நாட்டு ராணிக்கு தலைவணங்கி வணக்கம் செலுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
முஸ்லீம் ராணி ரனியா
முஸ்லீம் நாடான ஜோர்டான் நாட்டு ராணி ரனியா தனது கணவரான மன்னர் 2ம் அப்துல்லாவுடன் வாடிகன் சிட்டிக்கு வந்திருந்தார்.
தலைவணங்கி வணக்கம்
அங்கு போப்பாண்டவரை அவர்கள் இருவரும் சந்தித்தனர். அப்போது வழக்கத்திற்கு மாறாக தலைவணங்கி ராணிக்கு வணக்கம் வைத்து வரவேற்றார் போப்பாண்டவர். மேலும் ராணியின் கை பிடித்து கை குலுக்கியும் வரவேற்றார்.
ராஜாவுக்கும் வணக்கம்
அதேபோல மன்னர் 2ம் அப்துல்லாவுக்கும் அவர் தலைவணங்கி வணக்கம் கூறினார்.
நூலகத்தில் சந்திப்பு
வாடிகன் சிட்டியில் உள்ள போப்பாண்டவரின் நூலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
மரபுகளில் நம்பிக்கையில்லை
இதுகுறித்து வாடிகன் சிட்டி அதிகாரி ஒருவர் கூறுகையில், போப்பாண்டவர் பிரான்சிஸ் மிகவும் எளிமையானவர். மரபுகள் குறித்துக் கவலைப்படாதவர். போப்பாண்டவராவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் இப்போதும் சாமானியராக இருக்கிறார் என்றார்.
முன்பு செருப்புக்கு முத்தம்
19ம் நூற்றாண்டு வரை போப்பாண்டவர்களை யார் சந்தித்தாலும் அவரது செருப்புகளுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்ற மரபு இரு்நதது. பின்னர் அது மாறி தலைவணங்கி வணக்கம் செலுத்தும் மரபு உருவாக்கப்பட்டது. ஆனால் அதை உடைத்தெறிந்துள்ளார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.
செல்போனில் படமெடுக்க போஸ்
இந்த நிகழ்ச்சிக்கு முன்புதான் செயின் பீட்டர் பசிலிகாவுக்கு வந்திருந்த இளம் இத்தாலிய யாத்ரீகர்களை சந்தித் போப்பாண்டவர், அவர்களுடன் சேர்ந்து நின்று செல்போனில் படம் பிடிக்க போஸ் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். குழந்தைத்தனமான ஆர்வத்துடன் அவர் போஸ் கொடுத்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது.