''நீ வெளியே, வா பாத்துக்கிறேன்'': நாடாளுமன்றத்தில் அமளி: 11 ஆந்திரா எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
டெல்லி: தெலுங்கானாவை எதிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சீமந்திரா எம்.பி.க்கள் 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று லோக்சபா கூடியதுமே தெலுங்கானா தனிமாநிலத்தை எதிர்த்து சீமந்திரா எம்.பி.க்கள் தொடர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியவில்லை. இதையடுத்து சபாநாயகர் மீரா குமார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ. சாய் பிரதாப், அனந்த வெங்கட்ராமி ரெட்டி, லகடபதி ராஜகோபால், மகுண்டா சினிவாசுலு ரெட்டி, கனுமுரி பாபி ராஜு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நிம்மல கிறிஸ்டப்பா, மொதுகுலா வேணுகோபால் ரெட்டி, கொனகல்லா நாராயண ராவ் மற்றும் டாக்டர் என். சிவபிரசாத் ஆகியோரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதே போன்று ராஜ்யசபாவில் தெலுங்கானாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சுஜானா சவுத்ரி மற்றும் சி.எம். ரமேஷ் ஆகியோர் அவையின் நடுவே வந்து நின்று கொண்டு கோஷமிட்டனர். இதையடுத்து சபாநாயகர் பி.ஜே. குரியன் அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களை வெளியே செல்லுமாறு மீரா குமார் தெரிவித்தபோது தெலுங்கு தேசம் உறுப்பினர் செல்ல மறுத்தனர். மேலும் அவையில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர். சித்தூர் எம்.பி. சிவபிரசாத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முகமூடியை அணிந்து அவரைப் போன்று பேசினார். ஓ, என் மருமகளே(சோனியா காந்தி), ஆந்திராவை பிரிக்க நான் எதிர்ப்பு தெரிவிக்க நீயோ பிரித்துவிட்டாய், இது நல்லதல்ல என்றார் பிரசாத். அவர் இதை தெலுங்கில் தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை கொறடா சந்தீப் தீக்சித் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிவபிரசாத்திடம் சென்று அவரை திட்டினர். தீக்சித் பிரசாத்திடம், அவையைவிட்டு வெளேயே வாரும். நீங்கள் டெல்லியில் எப்படி இருக்கிறீர்கள் என்று நான் பார்க்கிறேன் என்றார். இதையடுத்து வாக்குவாதம் முற்றியது.
இதைப் பார்த்த மீராகுமார் அவையை ஒத்திவைத்தார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவபிரசாத் உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் கொடுத்தனர். இதில் சிவபிரசாத் சிறுபான்மையின பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.