குழந்தைகளுக்கு எதிரான செக்ஸ் குற்றங்கள் அதிகரிப்பு…
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் 22.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 12 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், தெரிவிக்கிறது புள்ளிவிபரம்.
இன்றைக்கு ஊடகங்களில் அதிகம் வெளியாகும் செய்திகள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்தான். பள்ளிக்கு செல்லும் எல்.கே.ஜி குழந்தை தொடங்கி டியூசன் செல்லும் 10ம் வகுப்பு மாணவி வரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் வெளியான புள்ளிவிபரம் அதிர்ச்சியளிக்கிறது.

இந்திய அளவில்….
குழந்தைகளுக்கு எதிராக தேசிய அளவில் 2012-ஆம் ஆண்டில் 38,172 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1036 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

2012ல் அதிகரிப்பு
2011-இல் நடந்த மொத்த குற்றச் சம்பவங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2.7 சதவீதம் அளவில் இருந்துள்ளது. ஆனால், 2012-இல் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2011-ஆம் ஆண்டோடு, 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களை ஒப்பிடும்போது 15.3 சதவீதம் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

உத்தரபிரதேசம் நம்பர் 1
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதில் தேசிய அளவில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 12-ஆவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் 12 %
தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 925 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. 2012-இல் 1036 சம்பவங்களாக அதிகரித்துள்ளன. அதாவது 12 சதவீதம் அளவுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

நகரங்களில் அதிகம்
தமிழகத்தைப் பொருத்தவரையில் கிராமப்புறங்களைக் காட்டிலும் பெருநகரப் பகுதிகளிலேயே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.

சென்னையில் குற்றங்கள்
சென்னையில் 83 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன. இதேபோல கோயம்புத்தூரில் 23, மதுரை 37, திருச்சிராப்பள்ளி 13 என குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடந்துள்ளன.

பாலியல் குற்றங்கள்
2012-இல் நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், பாலியல் குற்றங்கள் 22.4 சதவீதமாகும். குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் 47.9 சதவீதமாகும். குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் 4.2 சதவீதமாகும்.

சிசுக்கொலைகள்
மாநிலத்தில் 2012-ல் 6 சிசுக் கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதேபோல பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், குடும்பத் தகராறு, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 292 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 576 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

காவல்துறை மெத்தனம்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரும், காப்பாளரும் புகார் தர தயாராக இருந்தும் காவல்துறை பெறுவதில்லை. இதற்கு உதாரணமாக 2011-ஆம் ஆண்டு 1407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த எண்ணிக்கை 2012-இல் 1708 வழக்குகளாக அதிகரித்துள்ளதாக காவல் துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தப்பும் குற்றவாளிகள்
இதனால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் எளிதாக நீதிமன்ற தண்டனையில் தப்பிவிடுவதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

உறவினர்கள் அத்துமீறல்
பெற்றோரின் அரவணைப்பு இல்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் வளரும் குழந்தைகள் அன்னியர்களின் பாலியல் தொந்தரவுக்கு எளிதாக இலக்காகி விடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுகிறவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பேர் உறவினராகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தப்பும் குற்றவாளிகள்
இந்தச் சம்பவங்கள் வெளியே தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என குழந்தையின் பெற்றோரும், குடும்பத்தினரும் உண்மையை மூடி மறைத்து காவல் நிலையங்களில் புகார் செய்வது கிடையாது. இதன் விளைவாக குற்றவாளிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காமலே சென்றுவிடுகிறது. இதேபோன்று பல்வேறு வகைகளில் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப வைக்கப்படுவதால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன என குழந்தைகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு
அண்மைக் காலமாக குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனம் குறைந்து வருவதாலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பிஞ்சு குழந்தைகளை காம வல்லூருகளிடம் காப்பாற்றுவது பெற்றோர்களின் கைகளில்தான் உள்ளது.












Click it and Unblock the Notifications