கொலை குற்றவாளி, காமக்கொடூரன் ஜெய்சங்கரை தப்ப வைத்தது யார்?
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கற்பழிப்பு குற்றவாளி ஜெய்சங்கர் தப்பிச் செல்ல அங்குள்ள யாரோ தான் உதவி செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பல்வேறு கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள பனங்காட்டூரைச் சேர்ந்த ஜெய்சங்கர்
(36) கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தான்.
இந்நிலையில் அவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறையில் இருந்து தப்பியோடிவிட்டான்.
போலி சாவி
ஜெய்சங்கர் அவன் அறைக் கதவை போலி சாவி போட்டு திறந்து சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவன் இருந்த அறையை உள்ளிருந்து திறக்க முடியாது.
பாதுகாவலர்கள்
ஜெய்சங்கரை அந்த அறையில் வைத்து பூட்டுவது, அவனை கண்காணிப்பது ஆகிய வேலையை பாதுகாவலர்களாக பணிபுரியும் ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர் செய்து வந்தனர். ஒன்று அவர்களில் ஒருவர் அறையை பூட்டாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்கள் அறையை வெளியே இருந்து திறந்துவிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
பவர் இல்லை, ஜெனரேட்டரும் இல்லை
ஜெய்சங்கர் அறையை விட்டு வெளியே வந்தபோது அதிகாலை 4 மணிக்கு யாரோ மின் இணைப்பு மற்றும் யுபிஎஸ் இணைப்பை துண்டித்துள்ளனர். சிசிடிவி கேமராக்களும் வேலை செய்யவில்லை. மேலும் ஜெனரேட்டரும் வேலை செய்யவில்லை.
சிசிடிவி கேமராக்கள்
பெங்களூர் சிறையில் மொத்தம் உள்ள 40 சிசிடிவி கேமராக்களில் வெறும் 8 மட்டும் தான் வேலை செய்கிறது. அந்த கேமராக்கள் 1996ம் ஆண்டில் வாங்கப்பட்டவை. 10 ஆண்டுகள் தான் அவை உழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரும்பு கம்பி
ஜெய்சங்கர் சிறையின் 20 அடி சுற்றுச்சுவரை 15 அடி நீள இரும்பு கம்பியைக் கொண்டு கடந்துள்ளான். அவன் அந்த கம்பியின் உதவியோடு ஏறும்போது யாரோ அவன் கீழே விழாமல் இருக்க கம்பியை பிடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
போலீஸ் உடையில்
ஜெய்சங்கர் போலீஸ் சீருடை அணிந்து தப்பியுள்ளான். அவன் யாருக்கும் தெரியாமல் சீருடையை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.