ஆக்ஸிஸ் வங்கியின் பொறுப்பற்ற சேவை... ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு தீபிகா பல்லிகல் வழக்கு
சென்னை: வங்கியில் பெருமளவில் பணம் இருந்தும் அதை தேவையான நேரத்தில் பயன்படுத்த முடியாமல் போனதாலும், இதுதொடர்பாக வங்கியிடம் முறையிட்டும் பொறுப்பில்லாமல் அவர்கள் பதிலளித்ததாலும், ஆக்ஸிஸ் வங்கி மீது பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டுள்ளார்.
தென் சென்னை நுகர்வோர் நீதிம்ன்றத்தில் தனது வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் ஆக்ஸி்ஸ் வங்கி மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதால் தான் பெரும் மன உளைச்சலுக்குள்ளானதாக கூறியுள்ளார் தீபிகா.
ஹோட்டல் பில்
ஹோட்டல் ஒன்றில் தீபிகா தங்கியிருந்துள்ளார். அதைக் காலி செய்து விட்டுக் கிளம்பியபோது ரூ. 30,000 பில் கட்டணம் வந்திருந்தது.
கார்டு இருக்கு... பயன் இல்லை
இதையடுத்து அந்தக் கட்டணத்தை செலுத்த தான் வைத்திருந்த ஆக்ஸிஸ் வங்கி டெபிட் கார்டை கொடுத்துள்ளார். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்ஸிஸ் வங்கியிலிருந்து பணத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
ரூ. 2 லட்சம் இருந்தும் புண்ணியமில்லை
அப்போது ஆக்ஸிஸ் வங்கியில் தீபிகா கணக்கில் ரூ. 2 லட்சம் வைப்புத் தொகை இருந்துள்ளது.
பொறுப்பற்ற வங்கி
இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் தீபிகா. ஆனால் அவர்களோ பொறுப்பில்லாமல் பதிலளித்ததாக தெரிகிறது. சரியாகவும் பதில் தரவில்லையாம். இதையடுத்து வேறு வங்கியின் கார்டைப் பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தியுள்ளார் தீபிகா.
மன உளைச்சல்
ஆக்ஸிஸ் வங்கியின் செயல்பாட்டால் கொதிப்படைந்த அவர் தற்போது தென் சென்னை நுகர்வோர் நீதிம்ன்றத்தில் வழக்குப் போட்டுள்லார். அதில், வங்கியின் பொறுப்பற்ற பதிலால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இதனால் 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
வருத்தம்தான் தெரிவிக்க முடியும்.. வேறென்னத்த செய்ய..
இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது வங்கித் தரப்பில் ஆஜரான வக்கீல் மிகப் பிரமாதமாக பதிலளித்தார். அதாவது அவர் கூறுகையில், நடந்தது தொழில்நுட்பப் பிரச்சினை. இதற்கு எங்களால் வருத்தம் மட்டுமே தெரிவிக்க இயலும் என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்.
அக்டோபர் 4ம் தேதி மறுபடியும் வாங்க
இதைத் தொடர்ந்து விசாரணையை கோர்ட், அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.