செப். 19க்குள் மோடி பெயரை அறிவிக்க பாஜக முடிவு
டெல்லி: செப்டம்பர் 19ம் தேதிக்குள் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கட்சித் தலைவர்களிடையே மோடிக்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையிலும், அதையும் மீறி, மோடியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க கட்சித் தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
நவராத்திரி விழாவின் முதல் நாள்தான் செப்டம்பர் 19 என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதற்கு முன்பாக மோடி பெயரை அறிவிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
இதற்காக விரைவில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் கூட்டவுள்ளார். அதில் மோடி அறிவிப்புக்கு ஒப்புதல் பெறவுள்ளார். அதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ். சம்மதத்துடன் பெயர் அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் நாடாளுமன்றக் குழுவில் மோடி எதிர்ப்பாளர்களும் கணிசமான அளவில் உள்ளனர். எனவே நிச்சயம் கூட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.