தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்.. பரமக்குடியில் அமைதி
பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 56வது நினைவு தினம் இன்று பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தால் பல்வேறு கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
இதுவரை எந்தவிதமான வன்முறையும், பிரச்சினையும் இல்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1957ம் ஆண்டு ஒரு ஏற்பட்ட வகுப்பு மோதலில் ஒரு பிரிவினரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் இமானுவேல் சேகரன். தாழ்த்தப்பட்ட சமுதாயத் தலைவரான இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதில் வன்முறை வெடித்துவருகிறது. உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து இந்த ஆண்டு மிக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜை நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அஞ்சலி நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களுக்கம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதலில் இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செவ்வூரைச் சேர்ந்த மக்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர்கள் சுப. தங்கவேலன், தமிழரசி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். ஆனால் இவர்கள் இரு கோஷ்டிகளாக வந்திருந்தனர்.
இவர்கள் போன பின்னர் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சுந்தரராஜன் ஆகியோரது தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மதிமுக சார்பில் கிருஷ்ணன் எம்.பி. சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2011ம் ஆண்டுநடந்த இமானுவேல் சேகரன் நினைவு தினத்தின்போது பரமக்குடியில் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 தலித் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். இந்த வன்முறை மதுரைக்கும் பரவியதில் அங்கும் பெரும் பதட்டம் நிலவியது குறிப்பிடத்தக்கது.
டூவீலரில் மதுரையிலிருந்து கிளம்பிய 59 பேர் கைது
இதற்கிடையே காவல்துறையின் தடை உத்தரவை மீறி மதுரையிலிருந்து இரு சக்கர வாகனங்களில் பரமக்குடிக்கு கிளம்பிய 59 பேரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏவும், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவருமான முருகவேல்ராஜ் தலைமயில் அவரது ஆதரவாளர்ள் நடத்தினர். ஆனால் தல்லாகுளத்தில் வைத்து இவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
திருமாவளவன் அஞ்சலி
இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இன்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.