திடீரென வந்த லிஸ்ட்.. அடித்துப்பிடித்து ஆபீஸுக்கு ஓடிய ஈபிஎஸ் ஆதரவாளர்.. ஓபிஎஸ் மீது ஆக்ஷன் எடுங்க!
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அதிமுகவினரை ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகளாக நியமித்ததைத் தொடர்ந்து அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கள் அனுமதி இல்லாமல் தங்களை நிர்வாகிகளாக நியமித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும், மாற்றி மாற்றி எதிரணியின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுத்து, பதவி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், ஈபிஎஸ் ஆதரவாளர்களை பதவிகளில் நியமனம் செய்வதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்து வருகின்றன.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் அணியில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், ஷாக்கான சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் அடித்துப் பிடித்துச் சென்று, மாவட்ட செயலாளரிடம் தாங்கள் எடப்பாடி அணியில் தான் தொடர்வதாக விளக்கம் அளித்துள்ளனர்.
ஐயப்ப மாலை போட்டிருக்கீங்க.. துபாய் ஹோட்டலில் நடந்த உண்மைய சொல்லுங்க! அண்ணாமலைக்கு காயத்ரி கேள்வி
ஓபிஎஸ் vs எடப்பாடி
அதிமுகவி்ல் ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து பொதுக்குழுவைக் கூட்டி அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்ற வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு அடுத்தகட்டமாக ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே ஓபிஎஸ் சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். எடப்பாடி பழனிசாமி அணி இன்று மா.செக்கள் கூட்டத்தை நடத்துகிறது.
ஓபிஎஸ் டீம்
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் மாறி மாறி எதிரணி ஆதரவாளர்களை இழுக்கும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாற்று அணியில் இருந்து வருபவர்களுக்கு ஓபிஎஸ் அணியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எடப்பாடி அணியில் இருந்து வருபவர்களுக்கு மாவட்ட செயலாளர் உள்பட அனைத்து மட்டங்களிலும் பதவி கொடுத்து வருகிறார் ஓபிஎஸ். மேலும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும் ஓபிஎஸ் திட்டமிட்டு வருகிறார்.
எதிரணியில் இருக்கும்போதே பதவி
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக இருக்கும்போதே ஓ.பன்னீர்செல்வம் அணியில் தங்களுக்கு பதவி கொடுப்பதாக ஆங்காங்கே பிரச்சனைகள் கிளம்பி இருக்கின்றன. ஈபிஎஸ் ஆதரவாளராக தொடர்ந்து கொண்டிருக்கும்போது, ஓபிஎஸ் அணி நியமிக்கும் நிர்வாகிகள் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றதைக் கண்டு எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது ஈபிஎஸ் அணிக்குள் பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
ஓபிஎஸ் நியமனம்
அரியலூர் மாவட்ட அதிமுகவில் ஏற்கனவே பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்களை தங்கள் அணியின் நிர்வாகிகளாக நியமித்து ஓபிஎஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. திருமானூர் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் ராசி.மனோகரனை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆகவும் வெண்ணிலா, இந்திரா, ராசாத்தி, சேசு, சுசிலா தர்மதுரை,மகேந்திரன், முத்து காந்தி உட்பட பல எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளை ஓபிஎஸ் அணியின் பல்வேறு பொறுப்புகளில் நிர்வாகிகளாக அறிவித்து பட்டியல் வெளியிடப்பட்டது.
அதிர்ச்சி
எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய எம்ஜிஆர் நினைவு ஊர்வலத்தில் பங்கேற்ற அதிமுகவினர் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்ததால் அதிர்ச்சியடைந்து உடனடியாக அரியலூரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு சென்று மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரனிடம் தங்களுக்கும் ஓபிஎஸ் தரப்பிற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனவும், ஒபிஎஸ் தரப்பில் வெளிவந்த அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் என்றும் கூறியுள்ளனர்.
ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுங்க
மேலும், நாங்கள் தொடர்ந்து எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவில் நீடிப்போம் என மாவட்ட செயலாளரிடம் உறுதி அளித்தனர். மேலும் தங்கள் ஒப்புதல் இல்லாமல் தங்களை அவரது அணியில் நிர்வாகிகளாக நியமித்த ஓபிஎஸ் மீது தலைமை கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்தனர். ஈபிஎஸ் அணி நிர்வாகிகள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தவே ஓபிஎஸ் தரப்பு இப்படிச் செய்கிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
தொடரும் சம்பவங்கள்
இதேபோல, ஆங்காங்கே நிகழ்வுகள் நடந்தேறி வருவது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளரான ஜெயராமன், வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஜெயராமன், தான் ஈபிஎஸ் அணியில் தான் இருப்பதாகவும், தன்னைக் கேட்காமலேயே ஓபிஎஸ் அணியில் பொறுப்பு வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதேபோல, மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி ராமசாமி என்பவருக்கு ஓபிஎஸ் அணியில் பதவி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்து அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.