ரூ.5 ஆயிரம் கோடி நன்கொடை வசூல்..விறுவிறு நடக்கும் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள்..தரிசனம் எப்போது
அயோத்தி: ராமர் கோவிலின் 40 சதவீத கட்டுமான பணி முடிவடைந்தது என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகி கூறியுள்ளார். அயோத்தியில் பூமி பூஜைக்கு பிறகு பிரபலங்கள் இப்போதும் வந்து ராமஜென்ம பூமியில் தரிசனம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டில் பூமி பூஜை நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பணிகளை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பக்தர்கள் நன்கொடை வழங்குகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் எப்போது கட்டி முடிக்கப்படும், எப்போது பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படும் என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்தது.

அயோத்தியில் பூமி பூஜை
அயோத்தி, அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதையடுத்து 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி வைத்தார். அடிக்கல் நாட்டினார். இப்பணி முடிவடைந்து நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன.

கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பு
இதையொட்டி, ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத்ராய் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், கடந்த 2 ஆண்டுகளாக எவ்வளவோ முட்டுக்கட்டைகளை சந்தித்தோம். கொரோனா காலம், பெரிய சவாலாக இருந்தது. அதையும் மீறி, கட்டுமான பணி தடையின்றி நடந்தது. 40 சதவீத கட்டுமான பணி முடிவடைந்துள்ளது. கோவில் கட்டுமான பணி செலவாக ரூ.11 கோடி நிர்ணயித்து இருந்தோம். பூமி பூஜையை தொடர்ந்து வர ஆரம்பித்த நன்கொடை இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. முன்பு, நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வந்தது. தற்போது, ரூ.35 லட்சம் ரூ.40 லட்சம் வரை வருகிறது.

ரூ.5 ஆயிரம் கோடி நன்கொடை
காசோலை, ரொக்கப்பணம் மட்டுமின்றி ஆன்லைன் மூலமாகவும் நன்கொடை வருகிறது. நன்கொடை ரூ.5 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. தங்கம், வெள்ளியாகவும் நன்கொடை கிடைக்கிறது. பூமி பூஜைக்கு பிறகு பிரபலங்கள் இப்போதும் வந்து ராமஜென்ம பூமியில் தரிசனம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டுமின்றி, முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள், சினிமா நட்சத்திரங்கள், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆகியோரும் வழிபட்டு சென்றுள்ளனர் என்று அவர் கூறினார்.

பக்தர்கள் தரிசனம் எப்போது
அயோத்தி ராமர் கோவிலுக்கு அக்டோபர் மாதத்துக்குள் அஸ்திவாரம் தயாராகிவிடும் என்றும் 2023ஆம் ஆண்டு டிசம்பரில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவடையும். செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்துக்குள் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் முடிந்து விடும் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications