நீங்கல்லாம் 90’ஸ் கிட்ஸ் தானே! 230 பெண்களை பார்க்க குவிந்த 14 ஆயிரம் மாப்பிள்ளைகள்! என்னா கூட்டம்!
பெங்களூர் : இந்த உலகில் அதிக பாவம் செய்தது 90ஸ் கிட்ஸ்கள்தான் என்பதைப் போல சமூக வலைதளங்களில் ஒரு நிகழ்வு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சுயம்வரத்தில் கலந்து கொண்ட 240 பெண்களை பார்ப்பதற்கு 14,000 திருமணமாகாத ஆண்கள் வந்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
வீட்டில் திருமண வயதை எட்டிய பெண்ணுக்கோ அல்லது மகனுக்கோ குடும்பத்தோடு சென்று பெண் பார்த்து, மாப்பிள்ளை வீடு பார்த்து நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்யும் காலங்கள் கடந்தோடி விட்டது.
முன்பின் தெரியாத முகங்கள் கூட தற்போது திருமண பந்தத்தில் இணைந்து விடலாம். திருமணத்தை ஆன்லைனில் நடத்தி ஸ்விக்கி, சொமோட்டாவில் உணவு ஆர்டர் செய்து டெலிவரி செய்யும் அளவுக்கு காலம் மாறிவிட்டது.

திருமணம்
உலகத்தில் மக்கள் தொகை பெருக்கம் அதிகம் இருந்தாலும் கடந்த 90 கால கட்டங்களில் நடந்த பெண் சிசு கொலை உள்ளிட்ட கொடூரங்கள் காரணமாக உலகின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஆண் பெண் விகிதம் குறைவாகவே உள்ளது. 27 முதல் 30 வயது வரை திருமணம் செய்ய உகந்த வயதாக கருதப்பட்டாலும் 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.

சுயம்வரம்
அவர்கள் குறையை போக்க மேட்ரிமோனி சைட்டுகள் சுயம்வர நிறுவனங்கள் பல்கி பெருகியுள்ளன. அப்படி ஒரு நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுயம்வர நிகழ்ச்சி தான் இப்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது. அப்படி என்ன நடந்தது இவ்வளவு பரபரப்பாக பேசப்பட என்ன காரணம் என்பது குறித்து பார்க்கலாம். அடுத்து உனக்கு தான் திருமணம் என வீட்டில் பெற்றோர் உசுப்பேற்ற 230 பெண்களை பார்க்க 14,000 பேர் விண்ணப்பித்து சுயம்வரத்தில் குவிந்த சம்பவம் தான் அது.

குவிந்த கூட்டம்
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் ஆதி சிஞ்னகிரி மடம் உள்ளது. இந்த மடத்தின் சார்பில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினருக்கு கல்யாணத்திற்கு வரன் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகன் தேவை என 230 பெண்கள் அந்த நிகழ்ச்சிக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். மணமகன்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து மலை போல விண்ணப்பங்கள் குவிந்தது.

திணறிய போலீஸ்
ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட 14,000 இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கேட்டு விண்ணப்பித்ததோடு நிகழ்ச்சி நடந்த அந்த நாளில் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். அரசியல் கட்சி மீட்டிங் போல கூட்டம் கூடியதால் மடத்தின் நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதை அடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த நீண்ட நேரம் முயன்றனர். பிறகு கூட்டத்தை கட்டுப்படுத்திய போலீசார் ஒவ்வொருவராக சுயம்வரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். இதை அடுத்து அங்கு வந்திருந்த மணப்பெண்களுக்கும் மணமகன்களுக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே பொருத்தம் அமைந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications