சரியா போச்சு.. பெங்களூரில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
பெங்களூர்: 2 நாட்களாக பெய்து வரும் மழையினால் வெள்ளக்காடாக மாறியுள்ள பெங்களூர்வில் 'இன்று முதல் மேலும் 5 நாட்கள் கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்துவருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிறைந்து வருகின்றன. சில அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருவதால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகள், தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்துவிடுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூர்வில் விடியவிடிய வெளுத்து வாங்கிய மழையினால் அந்த நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக நேற்று முன் தினம் ஒரு நாள் இரவில் மட்டும் 130 மிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியதால் தான் இந்த அளவுக்கு நகரத்தில் தண்னீர் தேங்கியதாக கூறப்பட்டது. சாலைகள், குடியிருப்புகள் பல்வேறு நிறுவனங்கள் உள்பட தண்ணீர் புகாத இடமே இல்லை என்று அளவுக்கு நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
இதனால் நேற்று நகரத்தின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளும், மீட்பு படையினரும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஒரு நாள் இரவு பெய்த கனமழைக்கே நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில் மேலும் 5 நாட்கள் மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மைய அறிவிப்பால் மீட்பு குழுவினர் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.