காருக்குள் கத்திய நடிகை.. இரவில் சுத்துப்போட்ட கும்பலால் ஷாக்.. பெங்களூரில் பரபரப்பு சம்பவம்
பெங்களூர்: பெங்களூருவில் கணவருடன் சேர்ந்து ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டு திரும்பிய சென்ற நடிகை ஹர்ஷிகா பூனச்சாவின் காரை ஒரு கும்பல் மறித்ததோடு, அவரது கணவரிடம் தகராறில் ஈடுபட்டு கன்னடத்தில் பேச எதிர்ப்பு தெரிவித்து தாக்க முயன்றனர். இதனால் நடிகை ஹர்ஷிகா பூனச்சா காரில் இருந்தபடியே கத்தி உதவி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூர் பிரேசர் டவுனில் வசித்து வருபவர் நடிகை ஹர்ஷிகா பூனச்சா. கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் புதுப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவர் தனது கணவர் புவன் பொன்னண்ணாவுடன் பிரேசர் டவுனில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தான் நடிகை ஹர்ஷிகா பூனச்சா தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் பெங்களூர் பிரேசர் டவுனில் உள்ள ஓட்டலுக்கு இரவு உணவு சாப்பிட சென்றனர். ஓட்டலில் அவர்கள் உணவை முடித்து கொண்டு வீட்டுக்கு காரில் புறப்பட தயாராகினர்.
இந்த வேளையில் ஹர்ஷிகா பூனச்சா மற்றும் அவரது கணவருடன் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஹர்ஷிகா தனது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛நாங்கள் பிரேசர் டவுனில் இரவு உணவை முடித்துவிட்டு காரில் புறப்பட தயாராகினோம். அப்போது காரை திடீரென்று மறித்த கும்பல், ‛இவ்வளவு பெரிய கார் என்பது எங்கள் மீது மோதிவிடும்' என கூறியது. அதற்கு எனது கணவர், ‛‛நான் இன்னும் காரை எடுக்கவில்லை. அதற்குள் ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள்'' என கூறினார்.
காரை மறித்த கும்பல் உருது மொழியிலும், அரைகுறை கன்னடத்திலும் பேசிய நிலையில் எனது கணவர் கன்னட மொழியில் பேசியுள்ளார். இதையடுத்து அந்த கும்பல் அவரை தாக்க முயன்றுள்ளது. இதையடுத்து நாங்கள் கத்தினோம். அப்போது அந்த கும்பல், ‛இவர்கள் கன்னடத்தில் பேசுகிறார்கள். இவர்களுக்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும்' எனக்கூறியதோடு, இழிவான மொழியில் திட்டினர். மேலும் எங்களை தாக்க முயன்றனர்.
என் கணவரை வெளியே வருமாறு மிரட்டினர். இந்த வேளையில் காரில் இருந்த எங்கள் குடும்ப பெண்கள், குழந்தைகள் பயந்துபோயினர். அவர்கள் பெரிய கும்பலாக இருந்ததால் எங்களால் எதையும் செய்யமுடியவில்லை. நாங்கள் கன்னடத்தில் பேசியதால் அவர்கள் கோபமடைந்து எங்களை தாக்க முயன்றனர். இதுபற்றி போலீசில் புகாரளித்தேன். ஆனால் அவர்கள் வருவதற்குள் ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தால் எனக்கு கர்நாடகாவில் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானில் வசிக்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், பெங்களூரு போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். மேலும் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோவை ஹர்ஷிகா பூனச்சா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வீடியோ மற்றும் சில போட்டோக்களை அவர் பதிவேற்றம் செய்துள்ளார். அவரது அந்த பதிவு பார்க்கும் பலரும் அந்த கும்பலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications