விதவைகள், விவகாரத்து பெற்ற பெண்கள் குறி! "நிர்வாணமாக்கி" வீடியோ எடுத்து..மிரட்டிய பெங்களூர் கும்பல்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பெண்களை மிரட்டி, பிளாக் மெயில் செய்து பணம் பறித்த கும்பலைப் பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்து உள்ளது.
பெங்களூர் மகாலட்சுமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த புகாரை போலீசார் விசாரித்த போது, பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது.

பெங்களூர்
இந்த புகாரின் அடிப்படையில் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களைக் குறி வைத்து அவர்களை மிளாக் மெயில் செய்து மிரட்டி பணம் பறித்ததாகப் பெங்களூரில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலம் சிக்ககொல்லரஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி மங்களா, துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் அவரது சகோதரர் சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்

எப்படி
அவர்கள் பெண்களை எப்படி ஏமாற்றி பணம் பறிப்பார்கள் என்பது குறித்த தகவல்களையும் போலீசார் பகிர்ந்து உள்ளனர். கேஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் ஸ்ரீனிவாசும் சிவக்குமாரும் விதவை பெண்கள், விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் வீட்டில் தனியாக வசித்து வரும் பெண்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பார்களாம். பின்னர் அப்பெண்களுக்கு உதவி செய்வது போல மங்களா அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவாராம்.

கடத்தல்
அந்த பெண்கள் குறித்து அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் மங்களா, அவர்களுடன் அனுதாபத்துடன் பேசி முதலில் நம்பிக்கையைப் பெறுவார். ஒரு கட்டத்தில் மங்களா மீது முழு நம்பிக்கையை வைக்கத் தொடங்குவார்கள். சரியாக அப்போது பார்த்து, வேலை வாங்கி தருவதாகக் கூறி ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள இடத்திற்குக் கூப்பிடுவார். எதுவும் அறியாத அந்த பெண்கள் அங்கு வந்ததும், மற்ற கூட்டாளிகளின் உதவியுடன் பெண்களைக் கடத்தி விடுவார்கள்.

நிர்வாணமாக்கி வீடியோ
ஒதுக்குப்புறமான இடத்திற்குப் பெண்களை அழைத்துச் செல்லும் அவர்கள், பின்னர் பயங்கர ஆயுதங்களைக் காட்டி அவர்களை மிரட்டி ஆடைகளைக் களையச் சொல்லுவார்கள். அந்த பெண்கள் அதற்கும் மறுத்தால், அவர்களை அடித்து துண்பறுத்தி ஆடைகளைக் களைந்துவிடுவார்கள். இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொள்வார்களாம்.

பணம் பறிக்கும் கும்பல்
பின்னர், பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் தங்கத்தைப் பறித்து வந்துள்ளனர். போலீசார் இவர்களைக் கைது செய்யும் போது, 1.20 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.70,000 ரொக்கம், குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்திய கார், ஆயுதங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இதுவரை குறைந்தது 8 பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

யாரும் புகார் அளிக்கவில்லை
போலீசாரிடம் சொன்னால் எங்கு இணையத்தில் வீடியோவை வெளியிட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் யாரும் போலீசாருக்கு செல்லவில்லை. சமீபத்தில் இதேபோல மகாலட்சுமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த பெண்ணை மிரட்டி பணம் பறித்து உள்ளனர். அந்தப் பெண் துணிச்சலாக போலீசாரிடம் புகார் அளித்தாலேயே இந்த கும்பலின் தொடர் குற்றச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதிரடி கைது
அவர்கள் தன்னை காரில் கடத்திச் சென்று, தாவரேகெரேவில் உள்ள ஒரு இடத்தில் ஆடைகளைக் களைத்து நிர்வாண வீடியோ எடுத்ததாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், 23 கிராம் தங்கம், சுமார் 1.20 லட்சம் பணத்தையும் அந்த பெண்ணிடம் இருந்து அந்த கும்பல் பிடுங்கி உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கும்பல் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டது.












Click it and Unblock the Notifications