ஜஸ்ட் 75 நிமிடங்களில் பெங்களூரிலிருந்து மைசூர் போகலாம்.. 10 வழிச்சாலை பணி அக்டோபரில் முடிகிறது!
பெங்களூர்: பெங்களூர்-மைசூர் இடையேயான ரூ.8,350 கோடி மதிப்பிலான 10 வழி எக்ஸ்பிரஸ் சாலை திட்ட பணிகள் அக்டோபருக்குள் முடிவடையும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இதன்மூலம் பெங்களூரு-மைசூர் இடையேயான 3 மணிநேர பயணம் வெறும் 75 நிமிடங்களாக குறைகிறது.
கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூர். இங்கிருந்து 117 கிலோமீட்டர் தொலைவில் மைசூர் உள்ளது. பெங்களூர்-மைசூர் இடையே நான்கு வழிச்சாலை உள்ளது.
தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பெங்களூர்-மைசூர் இடையே 10 வழிச்சாலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டது.
சுங்க கட்டணம் குறையப்போகிறது? இனிமேல் 60 கி.மீக்கு ஒரு டோல் கேட்தான்.. அடித்து சொன்ன நிதின் கட்கரி
10 வழிச்சாலை திட்டம்
இதுகுறித்து தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசும் பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதன்படி 6 வழிச்சாலைகள் நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு மீதமுள்ள 4 வழிகள்(இருபுறமும் தலா 2) சர்வீஸ் ரோடுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
அக்டோபரில் பணி முடியும்
பெங்களூரு-மைசூரு இடையேயான இந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பணி 2018 ரூ.6,400 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா பரவல் உள்பட சில காரணங்களால் குறித்த காலத்தில் பணியை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த பணி அக்டோபர் மாதத்துக்குள் முழுவதுமாக முடிவடையும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பெங்களூரு-நிடகட்டா-மைசூரு நெடுஞ்சாலை திட்டம் ரூ.8,350 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2022 அக்டோபருக்குள் முடிவடைந்து விடும்'' என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பெங்களூர்-மைசூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டப்பணியின் செலவானது ரூ.6,400ல் இருந்து ரூ.8,350 கோடியா உயர்ந்துள்ளது தெளிவானது.
பயண நேரம் குறையும்
இதன்மூலம் பெங்களூர்-மைசூர் இடையேயான 117 கிலோமீட்டர் தூரத்துக்கான பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறையும். இந்த நெடுஞ்சாலை பணிகள் 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பெங்களூரு -நிடகட்டா இடையே முதல் தொகுப்பு பணியும், நிடகட்டா-மைசூரு இடையே 2ம் கட்ட பணியும் நடைபெற்று வருகிறது.
மேம்பாலங்கள்
இதில் பஞ்சமுகி விநாயகர் கோவில் அருகே 4.22 கிலோமீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கும்பலக்கோடு, ஸ்ரீரங்கபட்டணாவில் சுங்கச்சாவடி அமைய உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 8 கிமீ நீளமுள்ள உயரமான நடைபாதை, 9 பெரிய பாலங்கள், 42 சிறிய பாலங்கள், 64 சுரங்கப்பாதைகள், 11 மேம்பாலங்கள், 4 ஆர்ஓபிகள் (சாலை மேம்பாலம்), ஐந்து புறவழிச்சாலைளை பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலை உள்ளடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.