அடுத்த ஷாக்.. பெங்களூர் சாலையில் திடீரென விழுந்த ராட்சத பள்ளம்..பைக்கில் சென்றவர் காயம்.. என்னாச்சு?
பெங்களூர்: பெங்களூர் பிரிகேட் ரோடு அருகே சூளே சர்க்கிள் பகுதியில் செல்லும் சாலையில் இன்று திடீரென்று ராட்சத பள்ளம் விழுந்தது. இந்த வேளையில் சாலையில் பைக்கில் சென்ற ஒருவர் விழுந்து காயமடைந்தார். இதுபற்றி விசாரணை நடத்திய நிலையில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதற்கான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் மக்கள் பயன்பாட்டுக்காக மெட்ரோ ரயில் சேவை உள்ளது. சாலையில் அதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் தினமும் ஏராளமானவர்கள் பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போதும் பல இடங்களில் மெட்ரோ ரயில் சேவைகளை நீட்டிப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மெட்ரோ சுரங்க பாதை அமைத்தல், மெட்ரோ பில்லர் அமைக்கும் பணிகள் பல இடங்களில் வேகமாக நடந்து வருகிறது.

சாலையில் விழுந்த ராட்சத பள்ளம்
இந்நிலையில் தான் பெங்களூர் நகரின் முக்கிய இடங்களில் ஒன்றாக பிரிகேட் ரோடு உள்ளது. இதன் அரகே மெட்ரோ 2ம் கட்ட பணியான நாகவாரா-கொட்டிகேரா வழித்தடத்துக்காக சுரங்க பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் பிரிகேட் ரோட்டில் உள்ள சூளே சர்க்கிளில் இன்று ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ரோட்டில் ராட்சத பள்ளம் விழுந்தது.

பைக்கில் சென்றவர் விழுந்தார்
இதனை பைக்கில் சென்றவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் பைக்குடன் கீழே விழுந்து காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் லேசாக மட்டுமே காயமடைந்தார். இதுபற்றி உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பகுதியை பார்வையிட்டனர்.

பள்ளத்துக்கு காரணம் என்ன?
முதற்கட்ட விசாரணையில் அருகே மெட்ரோ சுரங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதனால் ஏற்பட்ட அதிர்வால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் பாதுகாப்பு கருதி அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதோடு, பள்ளத்தை சரிசெய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.

தாய்-மகன் பலிக்கு பிறகு..
முன்னதாக, 2 நாட்களுக்கு முன்பு பெங்களூர் நாகவரா அருகே மெட்ரோ ரயில் பில்லர் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த பில்லரின் அடியில் 4 பேர் சிக்கினர். சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதி, அவர்களின் மகன், மகள் ஆகியோர் இடிபாடுகளுக்கு சிக்கினர். இதில் அந்த தாயும், 2 வயது மகனும் இறந்த நிலையில் தந்தையும், மகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மெட்ரோ பணியின் காரணமாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் விழுந்து ஒருவர் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications