ஜெயலலிதாவின் நகைகளை எடுத்து செல்ல 6 இரும்பு பெட்டிகள்.. தமிழ்நாடு அரசுக்கு கர்நாடகா கோர்ட் உத்தரவு!
பெங்களூர்: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான 28 கிலோ தங்கம், 800 கிலோ வெள்ளி உள்ளிட்ட நகைகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்ல 6 இரும்புப் பெட்டிகளை மார்ச் 6, 7-ந் தேதிகளில் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 2014-ம் ஆண்டு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

கர்நாடகா தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராக ஜெயலலிதா தரப்பு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நீதிபதி குன்ஹா தீர்ப்பை ரத்து செய்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் அப்போது ஜெயலலிதா மறைந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மட்டும் 4 ஆண்டு சிறைவாசம் அனுபவித்தனர்.
இதனிடையே கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்டவைகளை ஏலம் விட உத்தரவிட கோரியிருந்தார். இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில், ஜெயலலிதாவின் அனைத்து நகைகளையும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கில் நேற்று நீதிபதி மோகன் முன்னிலையில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்டவை அடுத்த மாதம் 6,7 தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதனைப் பெற்றுக் கொள்ள உள்துறை முதன்மை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி, போட்டோகிராபர், வீடியோகிராபர் ஆஜராக வேண்டும் என்றும் அப்போது ஜெயலலிதாவின் நகைகளை எடுத்துச் செல்ல 6 இரும்பு பெட்டிகளைக் கொண்டு வரவும் நீதிபதி மோகன் உத்தரவிட்டார். மேலும் சொத்து குவிப்பு வழக்கு செலவுக்காக கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு அரசு ரூ5 கோடி செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் நகை விவரங்கள்:
28 கிலோ தங்கம்- வைர நகைகள்
800 கிலோ வெள்ளி நகைகள்
11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள்
740 விலை உயர்ந்த செருப்புகள். இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு அரசின் கருவூலத்தில் வைக்கப்பட உள்ளன. கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதாவின் நகைகளை கொண்டு வர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications