வறட்சியை நோக்கி வேகமாக நகரும் பெங்களூர்.. தினமும் 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை! ஷாக் தகவல்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, பெங்களூரில் நாள் ஒன்றுக்கு 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டெக் நகரமான பெங்களூர் தற்போது தண்ணீரின்றி தவித்து வருகிறது. ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவில் 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சியால் தத்தளிக்கின்றன, அவற்றில் 219 மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக இதுபோன்ற வறட்சி காலங்களில் தனியார் டேங்கர் லாரிகளை மக்கள் நாடுவார்கள். ஆனால் இந்த முறை தனியார் டேங்கர் உரிமையாளர்களே தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

பெங்களூரில் 14,000 ஆழ்துளை கிணறுகளிலிருந்து, 4000 டேங்கர் லாரிகள் தண்ணீரை எடுத்து சப்ளை செய்கின்றன. ஆனால் இந்தமுறை சுமார் 7000 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. எனவே மொத்த தண்ணீர் விநியோகத்தில் 50 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரி தண்ணீரின் விலையும் உயர்ந்திருக்கிறது. வழக்கமாக ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.500-600 வரை விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ.2000ஆக இது உயர்ந்திருக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை சரி செய்ய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இது குறித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, பெங்களூரில் நாளொன்றுக்கு சுமார் 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
"பெங்களூருக்கு ஒவ்வொரு நாளும் 260 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 147 கோடி லிட்டர் காவிரி ஆற்றிலிருந்து பெறப்படுகிறது. அதேபோல 65 கோடி லிட்டர் ஆழ்துளை கிணற்றிலிருந்து கிடைக்கிறது. மொத்தம் சேர்த்தால் 210-212 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. எனவே 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் காவிரி 5 திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இதன் பின்னர் தண்ணீர் பற்றாக்குறை குறைய வாய்ப்பிருக்கிறது. காவிரி மற்றும் கபினி நீர்த்தேக்கங்களில் போதுமான அளவு குடிநீர் இருப்பு வைத்து, அதை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். தற்போது கேஆர்எஸ் அணையில் 11.04 டிஎம்சி, கபினியில் 9.02 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. இது ஜூன் வரை போதுமானதுதான். இருப்பினும், 313 இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். ஏற்கெனவே வறண்டு போன 1200 போர்வெல்களுக்கு புத்துயிர் அளிக்க திட்டமிட்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
இது தவிர, பெங்களூரில் வறண்டு போன ஏரிகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் விதமாக ஏரிகளில் நீரை நிரப்பவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி செய்வதன் மூலம் வறண்டுபோன ஆழ்துளை கிணறுகளில் நீர் மீண்டும் ஊற்றெடுக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications