பெங்களூரை தொடர்ந்து மிரட்டும் மழை ஆபத்து.. ஏரியாவுக்கு ஏரியா பெருமளவுக்கு மாறும் மழையளவு
Recommended Video
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், மழை ஆபத்து சூழ்ந்து உள்ளது என்று எச்சரிக்கிறது வானிலை ஆய்வு மையம்.
தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்து, அதன் இறுதிக் கட்டத்தில் இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் திடீரென இரவு கன மழை கொட்டித் தீர்த்தது.
குறிப்பாக, சிங்கசந்திரா, பொம்மனஹள்ளி, ஹெச்எஸ்ஆர் லேஅவுட், மடிவாளா, கோரமங்களா, சில்க்போர்டு, பிடிஎம் லேஅவுட் உள்ளிட்ட, தெற்கு பெங்களூர் பகுதிகளில் கனமழை பெய்தது.
இடி, மின்னலுடன் மழை
இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோரமங்களா, பிடிஎம் லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றதால் அவதிக்கு உள்ளாகினர். மேலும், இதன் காரணமாக பல வீடுகளில் மின் சாதனப் பொருட்கள் பழுதடைந்த சம்பவமும் நடைபெற்றது.
9 செ.மீ மழை
அதே தினம் கோரமங்களா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்த நிலையில், பொம்மனஹள்ளியில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. வெறும் ஆறு கிலோ மீட்டர் தூர வித்தியாசத்திற்கு இவ்வளவு தூரம் மழை வேறுபாடு இருந்தது கவனிக்கத்தக்கது.
மழை தொடரும்
இந்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகளும் பெரும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் மழை இன்றும் தொடரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சில நாட்களும் இதேபோன்று கனமழை கொட்டி தீர்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மின்சாதன பொருட்கள்
அதுவும் இரவு நேரங்களில்தான் கனமழை பெய்யக்கூடும் என்றும், இடி மின்னலுடன் மழை பெய்யும் என்பதால், அந்த நேரத்தில் மின்சாதன பொருட்களின் இணைப்புகளை துண்டித்து கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.