கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. எடியூரப்பா முதல்வராவது டவுட்.. காரணம் என்ன தெரியுமா?
Recommended Video
பெங்களூர்: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு, கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லை என்ற பழமொழி தற்போது நான்கு பொருந்திப் போகிறது.
இரண்டு நாட்கள் பட்டினியாக கிடந்தவரின் முன்பு, சுடச்சுட பிரியாணி வைத்துவிட்டு, சாப்பிடாதே என்று கைகளை கட்டிப் போட்டால், அவர் எந்த மாதிரி மனநிலையில் இருப்பாரோ, அதே மாதிரி மன நிலையில்தான் தற்போது எடியூரப்பாவும் இருக்கிறார்.
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கலைந்தாகிவிட்டது. ஆனால், இன்னும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை பாஜக.

எடியூரப்பாதான் காரணம்
இதற்கு ஒரு முக்கிய காரணம் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் எடியூரப்பா தான் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் நிதர்சனம். பெரும் தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டு உள்ளது பாஜக தலைமை. எடியூரப்பாவை புறக்கணிப்பதா, அல்லது தங்கள் கட்சியின் கொள்கையை விட்டு தரவா என்பது அமித்ஷா முன்பாக தொக்கி நிற்கும் கேள்வி.

75 வயது வரம்பு
அப்படி என்ன ஒரு கொள்கை என்கிறீர்களா? அமித்ஷா, பாஜக தலைவரான பிறகு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். அதில் ஒன்று, பாஜகவை சேர்ந்த யாராவது, அமைச்சர் மற்றும் அதற்கு மேல் உள்ள பதவியை வகிக்க, அதிகபட்ச வயது வரம்பு 75 மட்டுமே என்பதுதான் அந்த அறிவிப்பு. ஆனால் எடியூரப்பாவுக்கு இந்த வருடம் பிப்ரவரி மாதம் 27-ம் தேதியுடன் 76 வயது பிறந்துள்ளது.

இழுபறி
எடியூரப்பாவுக்கு முதல்வராக அனுமதி கொடுத்தால், பிற மாநிலங்களிலும் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் தங்களுக்கும், பல்வேறு பதவிகள் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் எடியூரப்பாவுக்கு பதிலாக வயதில் சிறிய வேறு ஒரு தலைவரை முதல்வர் ஆகலாம் என்று அமித் ஷா, யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இழுபறியின் காரணமாகதான், இதுவரை கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரவில்லை.

பலே ஐடியா
இந்த நிலையில்தான், முன்னாள் முதல்வரும், பாஜக பிரமுகருமான ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான ஒரு குழு, இன்று டெல்லியில் அமித்ஷாவை, சந்தித்து ஆலோசனை நடத்தியது. அப்போது 2018 சட்டசபை தேர்தலின்போதே, பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் எடியூரப்பா. அப்போது அவருக்கு 75 வயது, நிரம்பவில்லை. எனவே, அந்த அறிவிப்பின்படி, நடப்பு சட்டசபை காலத்தில் அவர் முதல்வர் ஆகலாம், என்று சொல்லி சமாளித்து விடலாம், என்று ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஐடியா செயல்பாட்டுக்கு வருமா இல்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில் எடியூரப்பாவை பகைத்துக் கொண்டால் கர்நாடகாவில் பாஜக காலி என்பது கள நிலவரம்.












Click it and Unblock the Notifications