ஆனந்தம் ஆனந்தம் நாளும்.. மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்.. எடியூரப்பா ஹேப்பி.. டென்ஷனில் குமாரசாமி!
பெங்களூரு: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை கவிழ்த்து ஆட்சியை பிடிப்பதில் பாஜகவினர் படு தீவிரமாக உள்ளனர்.
கர்நாடகாவில் மத சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இதில் அவ்வப்போது நடைபெற்ற அமைச்சரவை மாற்றங்களில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம் எல் ஏக்களை தங்கள் வசம் இழுத்து பாஜக ஆப்பரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் பல்வேறு முறை ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது அங்கு பட்ஜெட் கூடத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள காங்கிரஸ் எம் எல் ஏக்களுக்கு பல விதங்களில் வலை வீசி தங்கள் வசமாக்கியுள்ள பாஜக அவர்களை ராஜினாமா செய்ய சொல்லப் போவதாக செய்திகள் வருகின்றன. இதனால் கர்னாடக முதல்வர் குமாரசாமி ஆட்சியை பறிகொடுக்கும் பரிதவிப்பில் உள்ளார்.
இப்போது காங்கிரஸ் எம் எல் ஏக்கள் 12 பேர் பாஜக வசம் உள்ளதாக தெரிகிறது. இதில் 6 பேர் வரை தங்கள் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் மீதம் உள்ளவர்களை வைத்து அடுத்தடுத்து ஆட்டம் காட்ட உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜக ஆட்சியமைக்க வேண்டுமானால் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. . இப்போது சுயேச்சைகள் இருவர் ஆதரவு அளித்து வரும் நிலையில் இன்னும் 7 உறுப்பினர்களின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும்.
உடனடியாக சாத்தியப்படுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் எடியூரப்பா தலைமயிலான பாஜகவினர் செய்து வருவதாக கூறப்படுகிறது. 104 உறுப்பினர்களை கொண்டுள்ள பாஜகவுக்கு ஆட்சியமைக்க வேண்டும் என்றால் மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஏற்கனவே அவர்களுக்கு இரண்டு சுயேச்சை உறுபப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் 6 பேர் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர். ஆகவே மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்ப்பது பாஜகவுக்கு அவ்வளவு சிரமமாக இருக்காது என்று கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு இருக்கக் கூடாது என்பதே இப்போதைக்கு பாஜகவினருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மென்ட். ஆகவே ஆபரேசன் லோட்டஸ் என்ற பெயரில் பாஜகவினர் தங்களால் எந்த எல்லைகளுக்கு எல்லாம் செல்ல முடியுமோ அந்த எல்லைகள் வரை சென்று காங்கிரஸ் மஜத கூட்டணி அரசை கவிழ்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரு நாட்களாக பாஜகவினர் கர்னாடக சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவினர் தர்ணாவில் ஈடுபடுவதற்கு பதிலாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அதை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என்று குமாரசாமி கூறி வருகிறார். ஆனால் பாஜக அதை உடனடியாக செய்யுமா என்பது சந்தேகமே. ஏன் எனில் இப்போது 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தாலும் அரசு உடனடியாக கவிழாது. ஆகவே சட்டசபையில் பெரும் குழப்பத்தை உருவாக்கி அதன் மூலம் இப்போது ஆதாயம் அடைவது ஒன்றே பாஜகவின் நோக்கம் என காங்கிரஸ் கருதுகிறது.
இருந்தாலும் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் மேலிடம் கடும் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் குறிப்பிட்ட 6 எம் எல் ஏக்கள் பாஜகவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து விட்டதால் காங்கிரஸ் மஜத ஆட்சிக்கு எந்நேரத்திலும் ஆபத்து வரலாம். அதை நினைத்து எடியூரப்பா பெரும் ஆனந்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.