விடாத சிபிஐ.. சொத்து குவித்ததாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் வீட்டில் அதிரடி சோதனை
பெங்களூர்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை அக்டோபர் 1ம் தேதி கர்நாடகத்தில் துவங்க உள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான டிகே சிவக்குமாரின் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில் இந்த சோதனை நடக்கிறது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டிகே சிவக்குமார். மிகவும் செல்வாக்கு மிகுந்த தலைவர். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் தான் கடந்த 2020ல் டிகே சிவக்குமாருக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சொத்கு குவிப்பு வழக்கு
இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.50 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் டிகே சிவக்குமாரிடம் விசாரணையை தொடங்கினர். மேலும் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் விடுதலையானார்.

அமலாக்கத்துறை விசாரணை
இருப்பினும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு டிகே சிவக்குமார் ஆஜராகி வருகிறார். கடந்த 19ம் தேதி கூட டிகே சிவக்குமார் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிகே சிவக்குமாரிடம் அதிகாரிகள் 6 மணிநேரத்துக்கு அதிகமாக விசாரித்தனர். அப்போது சட்டவிரோத பண பரிமாற்றம் சம்பந்தமாக அவரிடம் விரிவான விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சிபிஐ அதிரடி சோதனை
இந்நிலையில் தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் இன்று டிகே சிவக்குமாரின் வீடு, அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை துவங்கி உள்ளனர். அதன்படி ராமநகர் மாடவ்டம் கனகபுரா, தொட்டஆலஹள்ளி, சந்தேகோடிஹள்ளியில் உள்ள வீடு, அலுவலகம், பண்ணை வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

உறவினர்களிடம் விசாரணை
கனகபுரா தாசில்தார் விஸ்வநாத் மற்றும் போலீசாருடன் சென்ற சிபிஐ அதிகாரிகள் வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து தொடர்பாக சில உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ராகுல் வருகைக்கு முன்பு ரெய்டு
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாரத் ஜேடோ யாத்திரையை துவங்கி உள்ளார். இந்த நடைப்பயணம் தற்போது கேரளாவில் ராகுல்காந்தியின் தொகுதியான வயநாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நடைப்பயணம் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து கர்நாடகத்தில் துவங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications