பெங்களூர் ஐடி துறையின் தந்தை.. கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஐசியுவில் அனுமதி
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பெங்களூர் ஐடி துறையின் தந்தையுமான, எஸ்.எம்.கிருஷ்ணா, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தேசிய அளவில் மட்டுமல்லாது.. தெற்காசியா அளவில் இன்று பெங்களூருக்கு என ஒரு தனி அடையாளம் இருக்கிறது. இதற்கு காரணம் ஐடி துறைகளின் வளர்ச்சிதான். எடுத்த எடுப்பிலேயே பெங்களூர் இப்போது உள்ள இடத்திற்கு வந்துவிடவில்லை. இதற்காக ஏராளமான சிக்கல்களையும், சவால்களையும் இந்த நகரம் எதிர்கொண்டது. ஆனால், இன்றைய நவீன பெங்களூருக்கு அடித்தளமிட்டவர், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தான்.

1999ம் ஆண்டு.. அப்போது எஸ்.எம்.கிருஷ்ணாதான் முதலமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில் பெங்களூர் இன்று இருக்கும் அளவுக்கு அங்கீகாரம் பெறவில்லை. வளர்ச்சி விஷயத்தில் ஆந்திராவுடன் பெரும் போட்டி இருந்தது. அப்போதுதான் ஐடி துறையில் பெரிய புரட்சி ஏற்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணா தீவிரமாக முயன்றார். முயற்சி கைமேல் பலனளித்தது.
விப்ரோவின் அசிம் பிரேம்ஜி, இன்ஃபோசிஸின் நாராயண மூர்த்தி, என ஐடி துறையின் ஜாம்பவான்கள், தொழில் துறையில் கர்நாடக அரசுடன் ஒத்துழைக்க முன்வந்தார்கள். இதற்கு பின்னால் Y2K Millennium Bug எனும் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது. எனவே, ஐடி துறையில் புதிய அப்டேட்கள் தேவைப்பட்டன. அதற்காக ஐடி நிறுவனங்கள் தீவிரமாக செயலாற்றின. இதைத்தான் எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருக்கான வாய்ப்பாக உருவாக்கினார்.
ஐடி துறை மீது எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் இருந்தது. எனவே, அமெரிக்காவில் இருக்கும் அவருடைய நண்பர்களிடம், பெங்களூரை இந்தியாவின் சிலிக்கான் வேலியாக எப்படி மாற்றுவது என்று ஆலோசனையை கேட்டு பெற்றார். ஐடி வளர்ச்சிக்காக முதல்வரின் ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் இணைய, விப்ரோவின் அசிம் பிரேம்ஜியை பங்கேற்க, முதல்வராக இருந்த கிருஷ்ணாவே நேரடியாக போன் செய்து அழைத்தார்.
இந்த குழு அமைக்கப்பட்டதன் பின்னணி, அதன் மூலம் நகரம் மறு கட்டமைப்புக்கு உள்ளாக்கப்பட்டது என, பல்வேறு விஷயங்களை சமீபத்தில் தி இந்து செய்தி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், கிருஷ்ணா கூறியுள்ளார்.
இப்படி இருக்கையில் கிருஷ்ணா சமீப நாட்களாக நுரையீரல் தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே, அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால், தற்போது திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. எனவே அவர் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications