ஹிஜாப் மேல்முறையீடு!.. உணர்ச்சிபூர்வமாக்காதீர்கள்.. முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
பெங்களூர்: ஹிஜாப்புக்கு தடை விதித்தது செல்லும் எனக்கூறி மாணவிகளின் மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை முன்கூட்டி விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று மறுத்ததோடு, உணர்ச்சிபூர்வமாக்க வேண்டாம் என தலைமை நீதிபதி என்வி ரமணா கூறினார்.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறைகள் வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தின.
ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு வழக்கை பிப்ரவரி 10 முதல் விசாரிக்க துவங்கியது. 11 நாள் விசாரணைக்கு பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 15ல் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. மேலும் ஹிஜாப் தடையை எதிர்க்கும், ஹிஜாப் அணிய அனுமதி கோரும் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேல்முறையீடு
இதையடுத்து 6 மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்வுகள் நடைபெற உள்ளதால் இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மார்ச் 16ல் கூறினார். இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் தலைமை நீதிபதி ரமாண கூறுகையில் ‛‛எங்களுக்கு நேரம் கொடுங்கள். ஹோலி விடுப்புக்கு பிறகு பார்ப்போம் '' என்றார்.

மறுப்பு தெரிவிப்பு
இந்நிலையில் மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞ் தேவுதத் காமத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவிடம் இன்று கோரிக்கை வைத்தார். அதாவது, ‛ஹிஜாப் தீர்ப்பின் மேல்முறையீட்டு மனுக்களை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும். தேர்வுகள் வருவதை கருத்தில் கொண்டு விசாரணைக்கான தேதியை அறிவிக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தார். இதற்கு தலைமை நீதிபதி என்வி ரமணா மறுப்பு தெரிவித்தார்.

உணர்ச்சிபூர்வமாக்க வேண்டாம்
மேலும் இதுதொடர்பாக தலைமை நீதிபதி என்வி ரமணா கூறுகையில், ‛‛தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை உணர்ச்சிபூர்வமாக்க வேண்டாம். '' என்றார். இதன்மூலம் மனுக்கள் விசாரணைக்கு வரும் என குறிப்பிட்ட தேதியையும் அவர் வழங்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications