பெங்களூரில் பயங்கரம்: பிளாட்பாரத்தில் மோதி தீ பிடித்த ஆடி கார்.. ஒசூர் எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பலி
பெங்களூர்: பெங்களூரில், சாலையோர நடைபாதையில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மகன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
பெங்களூர் கோரமங்களா பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து நடைபெற்றுள்ளது.
கோரமங்களா பகுதி என்பது பெங்களூரில் உயர் வருவாய் பிரிவினர் வசிக்கக்கூடிய ஒரு பகுதிகளில் ஒன்றாகும். குடியிருப்பு ஏரியாவான, கோரமங்களா சமீபகாலமாக ஹோட்டல்கள், பார்கள் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. பல பகுதிகளிலும் இருந்து கோரமங்களா வந்து நள்ளிரவு வரை உணவு சாப்பிட்டு நண்பர்கள் மட்டும் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு செல்லும் மக்கள் அதிகம்.
கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்தும் காரும் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி
குடியிருப்பு பகுதி
இது நெடுஞ்சாலை பகுதியில் வரும் ஏரியா கிடையாது . அப்படியிருந்தும் குடியிருப்புப் பகுதியில் அதிவேகமாக கார் ஓட்ட ப்பட்டிருக்கிறது. எனவே தான், இந்த விபத்து நடைபெற்றுள்ளது என்று போலீசார் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் விபத்துக்குள்ளான கார், ஆடி நிறுவனத்துக்கு சொந்தமானது. வலுவான கட்டமைப்பு கொண்ட கியூ 3 வகை, சொகுசு கார் அது. அப்படியிருந்தும் சாலையோர பிளாட்பாரத்தில் மோதியதில் உள்ளே இருந்த 7 பேரும் கடுமையாக காயமடைந்துள்ளனர். உடனடியாக வாகனம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து உள்ளது . எனவே உடல் கருகி பலியாகி உள்ளனர்.
போலீஸ் விசாரணை
குடியிருப்பு பகுதியில் இவ்வளவு வேகமாக வாகனத்தை ஓட்டுவதற்கு வாய்ப்பு கிடையாது. எனவே வாகன ஓட்டுநர் மது போதையில் இருந்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் விபத்தில் பலியானவர்கள் யார் என்ற விபரம் தெரியாமல் இருந்தது. ஆனால், விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்திய பிறகுதான் உயிரிழந்தது, ஓசூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மகன் என்பது தெரியவந்தது.
அதிவேகம்தான் காரணம்
இதுகுறித்து பெங்களூர் நகர போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ரவிகாந்த் கவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், விபத்துக்குள்ளான இந்த கார் சாலையோர பிளாட்பாரம் மேலே ஏறி பிறகு அங்கே இருந்த கட்டிடம் ஒன்றின் சுற்றுச்சுவர் மீது மோதியுள்ளது. வேகமாக கார் வந்து இருக்கவேண்டும் என்று சந்தேகிக்கிறோம். சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர், இன்னொருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல் கட்ட விசாரணையில் ஓட்டுனரின் மெத்தனம் மற்றும் அதிவேகம் காரணமாக இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். சம்பவம் நடந்த நேரத்தில் இங்கு மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக இருக்கும் . இதை பயன்படுத்தி மிக வேகமாக பயணித்து இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
3 பெண்கள்
இந்த வாகனத்தில் 3 பெண்கள் 4 ஆண்கள் இருந்துள்ளனர். அவர்கள் குறித்த விவரம் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. முன்புற இருக்கையில் 3 பேர், பின்புற இருக்கையில் 4பேர் அமர்ந்து பயணித்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் விவரம்
உயிரிழந்தவர்கள் பெயர் பட்டியலை பெங்களூர் போலீசார் வெளியிட்டுள்ளனர். அதுகுறித்த விவரம்: ஒசூரைச் சேர்ந்த கருணாசாகர் (28), கேரளாவைச் சேர்ந்த அக்சய் கோயல் (23), ஹரியானாவைச் சேர்ந்த உத்சவ் (23), கர்நாடக மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த ரோஹித் (23) ஆகியோர் உயிரிழந்த ஆண்களாகும். இஷிதா (21), தனுஷா (21) மற்றும் பிந்து (28) ஆகியோர் அந்த காரில் பயணித்து உயிரிழந்த பெண்களாகும். இதில், கருணாசாகர் தவிர பிறர் அனைவரும் பெங்களூரிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கருணாசாகர் மட்டும், ஒசூரிலிருந்து அங்கு வந்து இவர்களோடு இணைந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இவர்களோடு சேர்ந்து கோரமங்களா பகுதிக்கு கருணாசாகர் ஏன் வந்திருந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. உயிரழந்தோர் சடலங்கள் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, மது போதை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது என்று ஆடுகோடி டிராபிக் போலீசார் தெரிவித்துள்ளனர்.