பெங்களூரை பாடாய் படுத்திய பாஜக, காங்.- போட்டி பேரணிகளால் முடங்கியது நகரம்- திண்டாடிய பொதுமக்கள்!
பெங்களூரு: நாட்டின் 76-வது சுதந்திர தின கொண்டாட்டத்தைக் கூட அரசியல் நிகழ்வுகளாக மாற்ற முடியும் என்பதை சூப்பராக நிரூபித்திருக்கின்றன பாஜக, காங்கிரஸ். இரு கட்சிகளும் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் போட்டி போட்டுக் கொண்டு நடத்திய சுதந்திர தின பேரணிகளால் நகரமே அல்லோகலப்பட்டுப் போனது.
கர்நாடகா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜக கடுமையான உட்கட்சி மோதல்களில் சிக்கித் தவிக்கிறது. இந்த பஞ்சாயத்தையும் மீறி ஆட்சியை தக்கவைக்க போராடுகிறது. கர்நாடகாவில் இழந்துவிட்ட ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு காங்கிரஸ் படுமுனைப்புடன் உள்ளது.
இந்த நிலையில் தலைநகர் பெங்களூரில் நேற்று நாட்டின் 76-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை தேர்தல் திருவிழா போல கொண்டாடித் தீர்த்தன காங்கிரஸும் பாஜகவும். இந்த இரு கட்சிகளின் அரசியல் ஆதாய போட்டியால் நேற்று பெங்களூர்வாசிகள் பெரும் துயரமடைந்தனர்.
பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் பாஜக சார்பில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெங்களூர் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பாஜகவினர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இரு சக்கர வாகனங்கள், கார்களில் தேசிய கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக பாஜகவினர் மைதானத்துக்கு வந்ததால் பெங்களூர் நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறிப் போனது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, மாஜி முதல்வர் எடியூரப்பா, மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் உள்ளிட்ட பாஜக பெருந்தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதற்கு போட்டியாக காங்கிரஸ் கட்சி பிரம்மாண்ட பேரணி ஒன்றை நடத்தியது. பெங்களூர் மெஜஸ்டிக் அருகே தொடங்கிய பேரணி ஜெயநகர் வழியாக பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானம் வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் கட்சியினர் லட்சக்கணக்கில் இந்த பேரணியில் பங்கேற்றனர். இதனால் பேரணி நடைபெற்ற பகுதிகளில் பல மணிநேரம் போக்குவரத்து முடங்கிப் போனது. பாஜக, காங்கிரஸ் கட்சியினரின் போட்டி பேரணியால் பெங்களூரு அல்லோகலப்பட்டதுதான் மிச்சம்.