ஹர்கர் திரங்கா பேரணிக்கு வந்தால் இலவச பெட்ரோல்! டோக்கன் வழங்கி ஏமாற்றிய பாஜக பிரமுகர்!
பெங்களூர்: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் ஹர்கர் திரங்கா எனும் பெயரில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் ஹர்கர் திரங்கா பேரணிக்கு வந்தால் இலவச பெட்ரோல் வழங்கப்படும் எனக்கூறி பாஜக பிரமுகர் டோக்கன் வழங்கிய சம்பவம் டுவிஸ்ட்டுன் பிரச்சனையாக மாறியது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? நாளை என்ன சொல்ல போகிறாரோ.. சு.சாமி கேள்வி
நேற்று முதல் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். மேலும் பலர் தங்களில் சமூக வலைதள பக்கங்களில் தேசியக்கொடியை டிபியாக மாற்றி உள்ளனர்.
கர்நாடகத்தில் பாஜக பேரணி
இதற்கிடையே தான் பாஜகவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் ஹர்கர் திரங்கா பேரணி நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானவர்கள் மோட்டார் சைக்கிளில் தேசியக்கொடி கட்டி பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளியில் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தலைமையில் பாஜக பிரமுகர் முனிராஜூ ஏற்பாடு செய்திருந்தார். முனிராஜூ வரும் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட தயாராகி வருகிறார்.
இலவச பெட்ரோலுக்கு டோக்கன்
இதனால் அவர் கூட்டத்தை கூட்ட விரும்பினார். இதற்காக ஊர்வலத்துக்கு வரும் நபர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் எனக்கூறி டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானவர்கள் டோக்கன் பெற்று கொண்டனர். இந்த டோக்கன் மூலம் பெங்களூர் -பாகேபள்ளி ரோட்டில் உள்ள ரங்கோத்ரி எனும் பங்க்கில் இலவசமாக பெட்ரோல் போட்டு கொள்ளலாம் என கூறப்பட்டது.
பெட்ரோல் போட்டுவிட்டு பேரணி புறக்கணிப்பு
இந்நிலையில் இன்று காலையில் மோட்டார் சைக்கிள்களில் தேசியக்கொடி கட்டி ஏராளமானவர்கள் பெட்ரோல் நிலையத்துக்கு சென்று இலவசமாக பெட்ரோல் நிரப்பி கொண்டனர். இருப்பினும் அவர்கள் ஹர்கர் திரங்கா பேரணிக்கு செல்லாமல் கிடைத்தவரை லாபம் எனக்கூறி வீடுகளுக்கு சென்றனர். இதுபற்றி அறிந்த முனிராஜூ சார்பில் இலவசமாக பெட்ரோல் வழங்குவதை நிறுத்தினர்.
வாக்குவாதம் - பரபரப்பு
இருப்பினும் டோக்கன் பெற்றிருந்த ஏராளமானவர்கள் பெட்ரோல் பங்க் வந்து பெட்ரோல் நிரப்பும்படி கூறினார். ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரேநேரத்தில் ஏராளமானவர்கள் மோட்டார்சைக்கிள்களில் திரண்டதால் பெட்ரோல் பங்க் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும் அவர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து செல்ல மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.