கர்நாடகா ஆபாச சிடி சர்ச்சை.. உயிருக்கு பாதுகாப்பு வேணும்.. இளம் பெண் மற்றொரு வீடியோ வெளியீடு
பெங்களூரு: கர்நாடகா ஆபாச சிடி வழக்கில் மற்றொரு திருப்பமாக, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையின் நம்பகத்தன்மையை அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பெண் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜர்கிஹோலி அடையாளம் தெரியாத ஒரு இளம் பெண் ஆகியோர் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சி.டி.யும், இருவருக்கும் இடையிலான ஆடியோ உரையாடல்களும் அண்மையில் தொலைக்காட்சிகளில் வெளியானது. இது தொடர்பான வீடியோவை சமூக செயற்பாட்டாளர் தினேஷ் கலாஹள்ளி என்பவர் வெளியிட்டிருந்தார்.
இவ்விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் கையில் சிடி-யுடன் எழுந்துநின்று பெரும் போர்க்கொடி உயர்த்தினர்.சித்தராமையா, காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ண பைரேகவுடா, பிரியங்க் கார்கே உள்பட பலர் மாநில அரசை 'சிடி அரசு' என விமர்சித்தனர்.
இதையடுத்து ரமேஷ் ஜர்கிஹோலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
குரல் மாதிரி
இதனிடையே ரமேஷ் ஜர்கிஹோலி மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான புகார்களைச் சிலர் வேண்டுமென்று கூறுவதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரின் வழக்கறிஞர் எம்.வி. நாகராஜ் புகார் ஒன்றையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அளித்தார் அமைச்சருக்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள சிடி ஆதாரத்தில் உள்ள குரல் மாதிரிகளைச் சோதனை செய்யும் பணியும் நடந்து வருகிறது.
எஸ்ஐடி விசாரணை
இந்நிலையில் கர்நாடகா ஆபாச சிடி வழக்கில் மற்றொரு திருப்பமாக, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையின் நம்பகத்தன்மையை அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பெண் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
வீடியோ வெளியீடு
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ள வீடியோவில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய எஸ்ஐடி முன் தோன்ற தயாராக உள்ளதாகவும் ஆனால் தனது குடும்பம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னரே வாக்குமூலம் அளிக்க தயார் என்றும் அந்த பெண் கூறுகிறார்
பாதுகாப்பு முக்கியம்
இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில், என் பெற்றோர் புகார் அளித்திருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தங்கள் மகள் எந்த தவறும் செய்யவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். எனது பெற்றோரின் பாதுகாப்பு முக்கியமானது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக எனக்குத் தெரிந்தவுடன், எனது வாக்குமூலத்தை பதிவு செய்ய நான் எஸ்ஐடி முன் ஆஜராகுவேன்,.
புகார் அளித்தார்
எனது பெற்றோருக்கு பாதுகாப்பு வழங்குமாறு சித்தராமையா, டி.கே.சிவகுமாரிடம் நான் கேட்க விரும்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். மார்ச் 12 அன்று, நான் ஒரு வீடியோவை உருவாக்கி, கமிஷனர் மற்றும் எஸ்ஐடியின் அலுவலகங்களுக்கு அனுப்பினேன். மார்ச் 13 ம் தேதி அமைச்சர் எதிராக புகார் அளித்தார். அடுத்த 30 நிமிடங்களுக்குப் பிறகு, எனது வீடியோ வெளியிடப்பட்டது. எஸ்ஐடி யாருக்காக வேலை செய்கிறது என்பது எனக்கு புரியவில்லை" என்றார்.
காவல்துறை தயார்
முன்னதாக ஒரு வீடியோவில், அந்த பெண் தனது பாதுகாப்பை வழங்குமாறு கர்நாடக உள்துறை அமைச்சரிடம் கோரியிருந்தார். உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை சட்டமன்றத்தில் இதுபற்றி கூறும் போது, அந்த பெண் விரும்பும் இடத்தில் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய காவல்துறை தயாராக உள்ளது. என்று உறுதி அளித்தார். கர்நாடகாவில் சிடி விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.