கர்நாடகா மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ.. ”கருத்து கூறுவது சரியல்ல” முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி!
பெங்களூரு: கர்நாடகாவில் மடாதிபதி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பவசராஜ் பொம்மை கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் முருகமடம் செயல்பட்டு வருகிறது. இந்த முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூா்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார். இந்த மடம் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவிகள் இருவரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர்.

மாணவிகள் புகார்
இதையடுத்து அந்த அமைப்பினர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு குழந்தைகள் குறித்து கூறியுள்ளனர். இந்த புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போக்சோ வழக்குப்பதிவு
தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, அவருக்கு உடந்தையாக இருந்த வார்டன் ரஷ்மி, பசவதித்தியா, பரமசிவன், கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கு மறுப்பு
மடாதிபதி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகார் குறித்து பதிலளித்த முருக மடத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்பி விஸ்வநாத், இந்த குற்றச்சாட்டுகளை உண்மைக்கு எதிரானவை. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் முன்னாள் எம்எல்ஏவும், மடத்தின் நிர்வாக அதிகாரி எஸ்கே பசவராஜன் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதுமட்டுமல்லாமல் சித்ரதுர்காவில் மடத்தின் நிர்வாக அதிகாரி பசவராஜன் மீது மடத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து
இந்த நிலையில் மடாதிபதி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பசவராஜ் பொம்மை, இது மிகவும் முக்கியமான வழக்கு. இந்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சித்ரதுர்காவில் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்படவில்லை
விசாரணை நடைபெற்று வருவதால், கருத்து கூறுவது சரியாக இருக்காது. காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் உண்மை வெளி வரும் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications