சிஎம் சித்தராமையா.. ராகுல் முடிவால் அதிருப்தியில் டிகே சிவகுமார்.. கார்கேவுடன் திடீர் ஆலோசனை
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவி கைநழுவிய நிலையில் ராகுல் காந்தி மீது டிகே சிவக்குமார் அதிருப்தியடைந்துள்ளார். இந்நிலையில் தான் இறுதியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து டிகே சிவக்குமார் பரபரப்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று மல்லிகார்ஜூன கார்கேவை இருவரும் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க விரும்பவில்லை.

இதைடுயடுத்து இன்று 2வது கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. ராகுல் காந்தி தனித்தனியோ சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரை சந்தித்து பேசினார். முதலில் சித்தராமையாவிடம் ராகுல் காந்தி 20 நிமிடங்கள் வரை பேசினார். அதன்பிறகு டிகே சிவக்குமாரிடம் சுமார் 45 நிமிடங்கள் வரை ராகுல் காந்தி பேசினர். இந்த சந்திப்புகள் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் வைத்து நடந்தது.
இந்த வேளையில் கர்நாடகா முதல்வர் பதவியை சித்தராமையாவுக்கு வழங்குவதாக ராகுல் காந்தி டிகே சிவக்குமாரிடம் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் நலன் சார்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், துணை முதல்வர் பதவியை ஏற்கும்படியும் கூறியுள்ளதாக தெரிகிறது. அதேபோல் சோனியா காந்தியும் டிகே சிவக்குமாரை தொடர்பு கொண்டு துணை முதல்வர் பதவியை ஏற்க கூறியுள்ளதோடு முக்கிய 2 துறைகளை வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதையடுத்து கட்சி தலைவர்கள் கூறியதால் டிகே சிவக்குமாரால் அதனை மறுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் துணை முதல்வராவதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் ராகுல் காந்தி மீது டிகே சிவக்குமாருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மாநில தலைவராக காங்கிரஸ் கட்சியை அதிகாரத்துக்கு கொண்டு வந்த தனக்கு முதல்வர் பதவியை வழங்க மறுப்பதாக அவர் நினைத்து அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தான் துணை முதல்வர் பதவியை விரும்பாத டிகே சிவக்குமார் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார். அதன்படி அவர் டெல்லியில் உள்ள மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்துக்கு தனது தம்பியும், பெங்களூர் புறநகர் எம்பியுமான டிகே சுரேசுடன் சென்றார். அங்கு அவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தனக்கு முதல்வர் பதவியை தர வேண்டும் என டிகே சிவக்குமார் மல்லிகார்ஜூன கார்கே மூலம் தொடர்ந்து இறுதியாக அழுத்தம் கொடுக்க முயன்றுள்ளார்.
இதற்கிடையே டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவலால் கர்நாடகாவில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். குறிப்பாக பெங்களூர், ராமநகரில் (டிகே சிவக்குமாரின் சொந்த மாவட்டம்) அவரது ஆதரவாளர்கள் போராட்டடத்தை தொடங்கி உள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்கான ராமநகர் மற்றும் பெங்களூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications