பெரியார் பிறந்தநாள்.. தமிழகம் இருக்கட்டும்! கர்நாடகாலிருந்து பறந்து வந்த வாழ்த்து - எத்தனை சாதனைகள்
பெங்களூரு: திராவிட இயக்கத்தின் மூலமாக சுயமரியாதை, உண்மைத் தன்மை, கருத்தியல் புரட்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மாபெரும் தலைவர் தந்தை பெரியார் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
திராவிடர் கழக நிறுவனரும், சமூக நீதி போராளியுமான தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

திமுக மரியாதை
அந்த வகையில் சென்னை அண்ணா சாலை சிம்சன் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு மலர்தூவி பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி சமூக நீதி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

ஸ்டாலின் வாழ்த்து
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், " பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம் என்றார்.

எடப்பாடி பழனிசாமி
இதேபோல், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சமூகத்தில் நிலவிய பழமைவாத கருத்துகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவாளர், பல்வேறு சமூகநீதி போராட்டங்களை முன்னெடுத்து வென்ற சமத்துவவாதி, பெண்களின் சம உரிமைக்காக போராடிய புரட்சியாளர், தன்னலமற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாளில் அவரின் பெரும்புகழை வணங்கி போற்றுகிறேன்." என தெரிவித்துள்ளார்.

டி.கே.சிவக்குமார்
இதேபோல், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். திராவிட இயக்கத்தின் மூலமாக சுயமரியாதை, உண்மைத் தன்மை, கருத்தியல் புரட்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மகத்தான தலைவர். அவரது கொள்கைகள் சமூக மாற்றத்துக்கு முக்கிய பங்காற்றின. அவரது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications