நீயெல்லாம் ஓவர்டேக் பண்றயா.. தலித் இளைஞரை கட்டிவைத்து அடித்த உயர் சாதியினர்! பரிதாபமாக பறிபோன உயிர்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தலித் இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் கூட இங்குச் சாதிய கொடூரங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து முயன்றே வருகிறது.
இருந்தாலும் கூட ஆங்காங்கே சாதிய வன்மங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு மிக மோசமான சாதிய கொடுமை தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முளபாகில் பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று அங்குத் தலித் இளைஞர் ஒவர், தனது நண்பருடன் பயணித்துள்ளார். அப்போது ராஜு என்பவரை ஓவர்டேக் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜு, தலித் இளைஞர் சென்ற பைக்கை மீண்டும் ஓவர்டேக் செய்துள்ளார். மேலும், "நான் உயர்ந்த சாதி... நீ எல்லாம் என்ன ஓவர்டேக் செய்யறயா" என்று திட்டத் தொடங்கியுள்ளார். அப்போது ராஜூவின் கிராமத்தைச் சேர்ந்த சிலரும் அங்குச் சேர்ந்து கொள்ளத் தலித் இளைஞரையும் அவனது நண்பர்களையும் மோசமாகத் திட்டத் தொடங்கியுள்ளனர்.
ஓவர்டேக்
பைக் மற்றும் மொபைலை பறித்துக் கொண்ட அவர்கள், தலித் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர், அந்த தலித் இளைஞரின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சிலர் சென்று, ராஜூவின் கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் பேசி, இரவு 8.30 மணியளவில் அந்த 22 வயது இளைஞரை மீட்டு வந்துள்ளனர். இதனால் மிகவும் மனமுடைந்துள்ளார் அந்த இளைஞர். இந்தச் சம்பவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், சம்பவம் நடந்து சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்த அந்த நபர் 22 வயதான உதய் கிரண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
இந்தச் சம்பவம் அப்பகுதி முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜு, சிவராஜ், கோபால் கிருஷ்ணப்பா மற்றும் முனிவெங்கடப்பா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "உதய் தனது நண்பருடன் சில மளிகை பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். அப்போது அவரது கிராமத்திற்கு அருகே மூன்று பைக்குகளில் சிலர் சென்ற நிலையில், அவர்களில் ஒருவரை உதய் ஓவர்டேக் செய்துள்ளார். அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மதுபோதை
மதுபோதையில் இருந்த அவர்களுக்கு தங்களை இளைஞர் ஒருவர் ஓவர்டேக் செய்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இளைஞரை மீண்டும் வழிமறித்துத் தாக்கியுள்ளனர். உதயின் பைக், மொபைலை பிடுங்கிய அவர்கள், ஊரில் இருக்கும் பெரியவர்களை வந்து வாங்கிக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிய அந்த இளைஞர், தன் மீது தாக்குதல் நடத்தியவர்களின் ஊரான பெத்தண்டலஹள்ளிக்கு ஷேர் ஆட்டோ மூலம் சென்றுள்ளார். அவர்களிடம் எப்படியாவது பேசி வண்டியையும் மொபைலையும் வாங்கிவிடலாம் எனச் சென்றுள்ளார்.
மன உளைச்சல்
இருப்பினும், அங்கு உதயை சாதி ரீதியாகவும் தகாத வார்த்தைகளாலும் திட்டிய அவர்கள், அங்கே உள்ள மரத்திலும் கட்டி வைத்து உதயை அடித்துள்ளனர். இது தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் உதயின் கிராமத்தைச் சேர்ந்த அங்குச் சென்று மீட்டுள்ளனர். வீட்டிற்கு வந்தது முதலே, மனவருத்தத்துடன் உதய் இருந்துள்ளார். கொஞ்ச நேரம் வெளியே நின்றுவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இருப்பினும் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்குத் திரும்பவில்லை.
தற்கொலை
இதனால் பதறிப்போன அவரது பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேட தொடங்கியுள்ளனர். அப்போது தான் அங்கேயுள்ள ஒரு மரத்தில் அந்த இளைஞர் தூக்கில் தேங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்" என்று அவர் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.