5 சிலிண்டர் ப்ரீ.. விவசாயியை கரம்பிடித்தால் ரூ.2 லட்சம்! கர்நாடகா தேர்தலில் அறிவித்த ஜேடிஎஸ்! லிஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஜேடிஎஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இளம் விவசாயிகளை திருமணம் செய்யும் இளம்பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்பன உள்பட 12 முக்கிய அறிவிப்புகள் மக்களை கவரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் அங்குள்ள களநிலவரம் வேறு விதமாக உள்ளது. அதாவது தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்புகள் 2 கட்சிகளுக்கு ஆட்சி அமைக்கும் வகையில் தனி மெஜாரிட்டி கிடைக்காது என கூறுகின்றன.

அதாவது கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் வரும் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு தனியே 113 இடங்கள் கிடைக்காது என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது பலிக்கும் பட்சத்தில் அங்கு கிங்மேக்கராக முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி தான் கிங்மேக்கராக மாறும்.
ஏனென்றால் ஒவ்வொரு தேர்தலிலும் ஜேடிஎஸ் கட்சி 25 முதல் 40 தொகுதிகள் வரை வெற்றி பெறுகிறது. இந்த முறையும் குறைந்தபட்சம் 30 தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றலாம் என கருத்து கணிப்புகள் சொல்கின்றன. இதனால் தொங்கு சட்டசபை உருவானால் மாநிலத்தில் யாருடைய ஆட்சி என்பதை நிர்ணயிக்கும் கட்சியாக ஜேடிஎஸ் மாறும். இந்த தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து ஜேடிஎஸ் செயல்பட்டு வருகிறது.
இதற்காக கட்சி சார்பில் பஞ்சரத்னா யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரை மூலம் மாநிலம் முழுவதும் முன்னாள் முதல்வர் குமாரசாமி சுற்றுப்பயணம் செய்து கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் நிச்சயம் இந்த முறை ஜேடிஎஸ் ஆட்சியை பிடிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் ஜேடிஎஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் உத்தரவாத பத்திரம் என்ற பெயரில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்தல் அறிக்கையை மாஜி பிரதமர் தேவேகவுடா வெளியிட்டார். அதன்படி ஜேடிஎஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீசக்தி சங்கங்களில் மக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். கர்ப்பிணிகளுக்கு 6 மாதம், ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.900ல் இருந்து ரூ2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 5 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளின் குடும்பத்திற்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
அதோடு, முதியவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். அங்கன்வாடியில் 15 ஆண்டு பணி செய்தால் ஓய்வூதியம் வழங்கப்படும். தனியார் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சட்டம் கொண்டு வரப்படும். விவசாயம் மேற்கொள்ளும் இளைஞர்களை திருமணம் செய்யும் இளம்பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். தொடக்க பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும்.
கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் 60 ஆயிரம் மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும். பெரிய அறுவை சிகிச்சைக்கு முதல்வர் நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும். மாநிலத்தில் நிமான்ஸ் போன்று 500 படுக்கைகளை கொண்ட மருத்துவமனை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 12 முக்கிய அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications