கன்னடத்தில் வணிக நிறுவன பெயர் பலகைகள் அவசர சட்டத்தை நிராகரித்த ஆளுநர்-கொந்தளிக்கும் கர்நாடகா!
பெங்களூர்: கர்நாடகாவில் வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் 60% கன்னடத்தில் கட்டாயமாக எழுத வேண்டும் என்கிற ஆளும் காங்கிரஸ் அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தர முடியாது என ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நிராகரித்திருப்பது அம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தராவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு டிசம்பரில் கன்னட் ரக்ஷன வேதிகே அமைப்பினர் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கி தார்பூசி அழித்தனர். இதனால் பெங்களூரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து கன்னட மொழியில் வர்த்தக நிறுவனங்கள் பெயர் பலகைகளை மாற்ற பிப்ரவரி 28-ந் தேதி வரை பெங்களூர் மாநகராட்சி கெடு விதித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் 60% கட்டாயம் கன்னடத்தில் எழுத வேண்டும். இதற்காக ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சட்டம் திருத்தப்பட்டு புதிய மசோதா நிறைவேற்றுவோம் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதனடிப்படையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டத்திலும் இதற்கான மசோதா ஒப்புதல் பெறப்பட்டது. இது தொடர்பான அவசர சட்டத்தையும் கர்நாடகா அரசு பிறப்பித்தது.
இந்த அவசர சட்டமானது ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநரோ, கர்நாடகா அரசின் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தராமல் நிராகரித்துவிட்டார். இதுதான் கர்நாடகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறியதாவது: ஆளுநரின் இம்முடிவு துரதிருஷ்டவசமானது. இந்த அவசர சட்டத்தை ஆளுநர் நிராகரித்திருக்கக் கூடாது. இது மாநிலத்தின் முதன்மை பிரச்சனை. கர்நாடகாவின் கவுரவம் சார்ந்தது. ஆகையால் ஆளுநர் தமது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். இதில் ஆட்சேபனை செய்ய என்ன இருக்கிறது. இது முற்போக்கான அவசர சட்டம்தான். இதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தால்தான் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய முடியும். இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார். கர்நாடகா ஆளுநரின் இந்த முடிவு அம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications