“இந்துக்களே கத்தியை கூர் செய்யுங்கள்".. சர்ச்சையை கிளப்பிய பிரக்யா.. எப்ஐஆர் போட்ட கர்நாடக போலீஸ்
பெங்களூர்: "இந்துக்கள் தற்காப்புக்காக தங்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், காய்கறி நறுக்கும் கத்தியாவது இருக்க வேண்டும்" என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் பேசியதற்காக அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹெச்.எஸ். சுந்தரேஷ் அளித்துள்ள புகாரின் பேரில் பிரக்யா தாக்குர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு வேறு சமூகத்தினர் இடையே பகையை உண்டாக்குவது, மத உணர்வுகளை தூண்டிவிடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்கு பெயர்போன பிரக்யா சிங்
போபால் பாஜக எம்பியாக இருப்பவர் பிரக்யா சிங் தாக்குர். சர்ச்சைக்கும், அதிரடி பேச்சுகளுக்கும் இவர் பெயர்போனவர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்த பிரக்யா சிங், சில ஆண்டுகளுக்கு முன்பு நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கினார். காந்தியடிகளை கொலை செய்த கோட்சவை, தேசபக்தர் என இவர் கூறியது பெரும் கண்டனங்களுக்கு உள்ளானது. விஷயம் பூதாகரமானதை அடுத்து, தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டார் பிரக்யா சிங்.

"கத்தி வைத்துக்கொள்ளுங்கள்"
இந்த சூழலில்தான், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவுக்கு பிரக்யா சிங் சில தினங்களுக்கு முன்பு பயணம் மேற்கொண்டிருந்தார். கர்நாடகாவின் இந்துத்துவா அமைப்பான ஜாக்ரன வேதிகாவின் மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரக்யா சிங், "லவ் ஜிஹாதிகளிடம் இருந்து உங்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். நம் பெண் குழந்தைகளுக்கு கலாசார மதிப்பு குறித்து பாடம் நடத்துங்கள். கர்நாடகாவில் இந்துத்துவவாதிகள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. எனவே, தற்காப்புக்காக நீங்கள் ஆயுதங்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எனவே, குறைந்தபட்சம் காய்கறி வெட்டும் கத்தியாவது வைத்துக்கொள்ளுங்கள். யாரேனும் வீட்டில் புகுந்தால் அவர்களை தாக்குங்கள்" என பிரக்யா சிங் பேசினார்.

புகார் அளித்த காங்கிரஸ்
பிரக்யா சிங்கின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் வித்திட்டது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரக்யாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்நிலையில், ஷிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரேஷ், கோட்டே காவல் நிலையத்தில் பிரக்யா சிங் மீது புகார் அளித்தார். அதில், "இந்துக்களை வீட்டில் ஆயுதங்கள் வைத்திருக்குமாறு பிரக்யா சிங் பேசியுள்ளார். அவரது பேச்சு ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும் வகையில் உள்ளது. மேலும், சகிப்பின்மை, வெறுப்பு, கலவரம் ஆகியவற்றுக்கும் அவரது பேச்சு வழிவகுப்பதாக உள்ளது" எனக் கூறப்பட்டிருந்தது.

எப்ஐஆர் போட்ட போலீஸ்
இந்த புகாரின் அடிப்படையில், கோட்டே காவல் நிலையத்தில் பிரக்யா சிங் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. மேலும், இரு வேறு சமூகத்தினர் இடையே பகையை உண்டாக்குவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பது, மத உணர்வுகளை தூண்டிவிடுவது, மத உணர்வுகளை காயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் பிரக்யா சிங் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications